கருணாநிதியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி-திருமா
சென்னை: இலங்கையில் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது முதல்வர் கருணாநிதியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
உண்ணாவிரதம் இருந்த முதல்வர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திருமாவளவன், மத்திய இணையமைச்சர் இளங்கோவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
தமிழர்களின் மனதில் நீங்காமல் இருந்து வந்த வேதனைக்கு முதல்வரின் உண்ணாவிரதம் ஆறுதல் அளித்திருக்கிறது. பலவித போராட்டங்களின் விளைவாக இந்திய பிரதிநிதிகள் இலங்கை சென்று போரை நிறுத்தும்படி வலியுறுத்திவிட்டு வந்தனர்.
48 மணி நேரத்தில் நல்ல தகவல் வரும் என்று காத்திருந்து, போர் நிறுத்த அறிவிப்பு இன்னும் ஏன் வரவில்லை என்ற நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் ஈடுபட்டார்.
உண்மையிலேயே, மிகுந்த அக்கறையோடு போர் நிறுத்தப்பட வேண்டும், ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையோடு அவர் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
ஆனால் இதை சிலர் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.