இலங்கை விவகாரம்-ஒபாமா அவசர ஆலோசனை
இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் காரணமாக, பல்வேறு வல்லரசு நாடுகளும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபப் பார்வையைத் திருப்பியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு முக்கிய நடவடிக்கையாக, அரசின் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
மிக முக்கியப் பிரச்சினைகளில் மட்டுமே இவ்வாறு பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து அதிபர் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனையில் அமெரிக்க வெளியுறவுத்துறை, பென்டகன், தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ்எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது.
அதிபர் ஒபாமாவுக்கு இலங்கை நிலவரம் குறித்து தினசரி தெரிவிக்கப்பட்டு வருகிறதாம். இலங்கை நிலவரத்தை அதிபர் ஒபாமா கூர்ந்து கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு இங்கிலாந்து நிதியுதவி:
இதற்கிடையே, இலங்கைக்கு 2.5 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் நிதியுதவியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இத்தகவலை தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமாவிடம், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார்.
அப்போது மிலிபான்ட் கூறுகையில், வடக்கில் போர் முனையில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம். அதற்கு இலங்கை அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.
அதற்கு பொகல்லகாமா பதிலளிக்கையில், வடக்கில் போர்த் தாக்குதல்கள் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும், இனிமேல் கனரக ஆயுதங்களைக் கொண்டு இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்தாது. தொடர்ந்து அப்பாவி மக்களை மீட்கும் முயற்சியிலேயே அது ஈடுபடும். விடுதலைப் புலிகளிடம் சிக்கியிருக்கும் அப்பாவி மக்களை மீட்கும் முயற்சியில் அது ஈடுபடும் என்றார்.
மேலும், சர்வதேச நாடுகள் இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்து வருவதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் பிரெஞ்சு அரசுகளின் உதவியுடன் இரு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பொகல்லகாமா தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த மிலிபான்ட், இலங்கையின் மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவ இங்கிலாந்து அரசு 2.5 மில்லியன் ஸ்டெர்லிங் பவுன்டு நிதியைத் தரும் என வாக்குறுதி அளித்தார்.
நாளை மிலிபான்ட் கொழும்பு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தவிர பிரான்ஸ், ஸ்வீடன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கொழும்பு வரவுள்ளனர். ஆனால், ஸ்வீடன் அமைச்சருக்கு இலங்கை தடை விதித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.