107 தொகுதிகளில் நாளை 3வது கட்டத் தேர்தல்
டெல்லி: நாளை நாடு முழுவதும் உள்ள 107 மக்களவைத் தொகுதிகளில் மூன்றாவது கட்டமமாக வாக்குப் பதிவு நடக்கிறது.
மக்களவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன.
இந் நிலையில் குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 16 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 15, மேற்கு வங்கத்தில் 14, கர்நாடகத்தில் 11, பிகாரில் 11, மகாராஷ்டிராவில் 10 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர், சிக்கிம், தத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி உள்பட மொத்தம் 107 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடக்கிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக தலைவர் அத்வானி உள்பட 1,567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தல் முடிந்தால் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 372 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து விடும்.
இந் நிலையில் இந்தத் தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துவிட்டது.
முந்தைய இரண்டு கட்ட வாக்குப் பதிவிலும் சராசரியாக 45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 13-தமிழகத்தில் விடுமுறை:
இதற்கிடையே தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடக்கும் மே 13, புதன்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தரவை நிதித்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.
ஊழியர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு?:
இதற்கிடையே தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, அசம்பாவிதம் காரணமாக அரசு ஊழியர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு, தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் பலருக்கும் கழிப்பறை வசதி கூட கிடைப்பதில்லை என்பதும், இதனால் ஊழியர்கள், குறிப்பாக பெண்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications