கைதான பெண் பாஸ்போர்ட் அதிகாரியின் சொத்து ரூ. 50 கோடி
சென்னை மண்டல பாஸ்போர்ட அதிகாரியாக உள்ள சுமதி ரவிச்சந்திரன் மற்றும் அவரது கணவர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.
இவருக்கு அரசியல் புள்ளிகளிடம் நல்ல செல்வாக்கு இருந்துள்ளது. இதை பயன்படுத்தி தான் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது பதவியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் யாரும் இருக்க கூடாது. இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பணி மாற்றம வழங்கியிருக்க வேண்டும். தனது அரசியல் செல்வாக்கு மூலம் இதை அவர் தடுத்துள்ளார்.
இவர்கள் இருவருடன் தொடர்புடையதாக கருதப்படும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தும் பாத்திமா, முஸாபர், ராஜூ ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் நிராபரதி என இவர்கள் ஐந்து போரும் நேற்று முன்தினம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அதில் சுமதி, தானும், தனது கணவரும் இல்லாமல் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கஷ்டப்பட்டு வருவதாகவும், அதனால் தனக்கு ஜாமீன் வழங்குமாறும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் சுமதியை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. மேலும் அவரது பல்வேறு வங்கி கணக்குகளை சோதனை செய்தது. அப்போது அவரது வங்கி லாக்கரில் கோடிக்கணக்கில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தவிர தங்க மற்றும் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பல சொத்துக்களின் ஆவணங்களும் சிக்கின. நான்கு லாக்கர்களில் கண்டுபிடிக்கப்பட்ட சொத்துக்கள், நகைகளின் மதிப்பு ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கும் என தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அவர் வேலை பார்த்த மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் ஊழியர் ஒருவர் கூறுகையில்,
பாஸ்போ்ட் கேட்டு விண்ணப்பிக்கும் சாதாரண மக்களை மாதக்கணக்கில் தேவையில்லாமல் அலைய வைப்பார்கள். ஆனால் அவரது கணவர் ரவிச்சந்திரனின் கையெழுத்து உள்ள டோக்கனை கொண்டு வரும் டிராவல்ஸ் ஏஜெண்டுகளுக்கு மட்டும் 1 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். அவர்கள் லஞ்சம் வாங்கி கொண்டு பயங்கரமாக ஆட்டம் போட்டனர்.
ஒவ்வொரு பாஸ்போர்ட்டுக்கும் ரூ. 15,000மாவது பெற்றுக் கொண்டுதான் கையெழுத்திடுவார். அவருக்கு சில போலீஸ் அதிகாரிகளும், முக்கிய அரசியல் புள்ளிகளும் துணையாக இருக்கின்றனர் என்றார்.
சுமதியை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதால் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொடர்பான செய்திகள்:
சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்-பெண் அதிகாரி கைது