சைக்கிள்-சேலை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் தடை
டெல்லி: வாக்காளர்களுக்கு இலவசமாக சைக்கிள்கள், வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாது என போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேருவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் மார்ச் 7ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், சைக்கிள்கள், வேட்டி, சேலை, அரிசி போன்றவற்றை இலவசமாக வழங்கியதாக புகார்கள் வந்தன.
அப்படிச் செய்திருந்தால் அது தேர்தல் விதி மீறலாகும். இந்தப் புகாரைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரியான திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மார்ச் 13ம் தேதி நேருவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதற்கு மார்ச் 18ம் தேதி விளக்கம் அனு்பியிருந்தார் நேரு. அதில், மார்ச் 1ம் தேதிதான் அந்த விழா நடந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே இந்த விழா நடந்ததாகவும், ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும், மார்ச் 7ம் தேதிக்கு விழாவை திமுகவினர் ஒத்தி வைத்ததாகவும், அந்த விழா அரசு விழாவோ அல்லது அரசு சார்பான விழாவோ அல்ல. நலிவடைந்த பிரிவினருக்கு, பொருளாதார ரீதியில் முன்னேறிய மக்களும், அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நலம் விரும்பிகளும் ஏற்பாடு செய்த விழா என்று கூறியிருந்தார்.
இந்த பதிலின் மூலம், இலவசப் பொருட்கள் கொடுக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் இது நடந்துள்ளது. இது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போலாகும்.
இது தேர்தல் நடத்தை விதி மீறலுக்கு சான்றாகும். மேலும், இந்திய அரசியல் குற்றவியல் சட்டம் 171-பி பிரிவின் கீழ் குற்றச் செயலும் ஆகும்.
எனவே அமைச்சர் நேரு இனிமேல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் மேற்கண்ட சட்டத்தின் கீழ் எந்த வகையான இலவசப் பொருட்களையும் வழங்குவதற்கு தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்க்பட்டுள்ளது.
அமைச்சர் நேருவுக்கும் கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.