கூடுதல் 'புரோகிராம்' கேட்கும் மலேசிய தெலுங்கு சமூகம்!
கோலாலம்பூர்: மலேசிய டிவிகளில் தெலுங்கு மொழி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை அதிக அளவில் ஒளிபரப்ப வேண்டும் என மலேசிய தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினரின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மலேசியாவில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இதில் தமிழர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர் ஆகும். இவர்கள் தவிர சீக்கியர்கள் சுமார் 1 லட்சம் பேர் உள்ளனர். தெலுங்கு பேசுவோர் 5 லட்சம் பேர் உள்ளனர். மேலும் மலையாளிகள், வட இந்தியர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
இந்த நிலையில் மலேசியாவில் உள்ள டிவிகளில் தெலுங்கு நிகழ்ச்சிகள் அதிக அளவில் ஒளிபரப்பப்படுவதில்லை என மலேசிய தெலுங்கர் சங்கம் புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சூரியநாராயணன் வெளியி்டுள்ள அறிக்கையில், ரேடியோ டெலிவிஷன் மலேசியா மற்றும் அஸ்ட்ரோ ஆகிய தொலைக்காட்சிகளில் அதிக அளவில் தெலுங்கு நிகழ்ச்சிகள், திரைப்படங்களை காட்ட வழி செய்ய வேண்டும்.
இதுதொடர்பான கோரிக்கை மனு, தகவல், ஒளிபரப்பு மற்றும் கலாச்சாரத் துறை அமச்சர் ரைஸ் யாதிமிடமும், அஸ்ட்ரோ டிவி நிறுவனத்திடமும் வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் 5 லட்சம் தெலுங்கர்கள் உள்ளனர். இவர்கள் தெலுங்கு திரைப்படங்கள், நாடகங்கள் உள்ளிட்டவற்றைக் காண ஆவலாக உள்ளனர். ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே இவை டிவி, ரேடியோக்களில் காட்டப்படுகின்றன என்று கூறியுள்ளார்.