200 பேரை சுட்டுக் கொன்ற புலிகள்-தயா மாஸ்டர்
கொழும்பு: ஈழப்பகுதியில் 200 அப்பாவி தமிழர்களை விடுதலை புலிகள் சுட்டுகொன்றதாக இலங்கை அரசிடம் சரணடைந்த தயா மாஸ்டர் பேசிய வீடியோ ஒளிப்பதிவு ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டு், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தயா மாஸ்டரை சந்தித்து பேட்டியை உறுதி செய்ய மீடியா விடுத்த வேண்டுகோளை இலங்கை நிராகரித்துவிட்டது.
இலங்கையில் ராணுவம் விடுதலை புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை ராணுவம் உடனே தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் விடுதலை புலிகளின் முன்னாள் செய்தி தொடர்பாளர் தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதியும், மொழி பெயர்ப்பாளர் ஜார்ஜ் என்ற பஞ்சரத்தினமும் தங்களிடம் சரண் அடைந்துவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது.
ஆனால், விடுதலை புலிகள் அவர்களை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தயா மாஸ்டரும் தங்களிடம் அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டதாகவும், அதை வீடியோ செய்திருப்பதாகவும் கூறி இலங்கை ராணுவம் ஒரு ஒளிப்பதிவை வெளியிட்டுள்ளது.
அதில் தயா மாஸ்டர் கூறுகையில்,
கடந்த 2002ல் நார்வே அமைதி பேச்சுவார்த்தையை கொண்டுவந்தது. அந்த பேச்சுவார்த்தை 2006ல் தோல்வியடைந்து போர் துவங்கியது. அப்போது நான் விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேற நினைத்தேன். ஆனால், புலிகள் என்னை விடவில்லை.
இதேபோல் தமிழ் மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். போர் பகுதியில் இருக்கும் சுதந்திராபுரம் என்ற கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதை அவர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அதையும் மீறி வெளியேற நினைப்பவர்களை கொன்றுவிட்டு ராணுவம் கொன்றுவிட்டதாக அவர்கள் பழி போடுகிறார்கள்.
இது போல் புதுமத்தாளன் பகுதியில் நடந்து வருகிறது. இதுவரை புலிகளால் 200 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு்ள்ளனர். போர் பகுதியில் இருக்கும் சிறுவர்களை விடுதலை புலிகள் வலுகட்டாயமாக தூக்கி சென்று விடுகின்றனர். இதய நோய் போன்ற கொடூர நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் விடுவதில்லை.
அதை தடுக்க நினைக்கும் பெற்றோர்களை தாக்குகின்றனர் என தயா மாஸ்டர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பேட்டி உண்மையா...
ஆனால், இது உண்மையான வீடியோவா என்ற சந்தேகம் உலக தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது. மேலும் தயா மாஸ்டரை நேரில் சந்தித்து இது அவர் கொடுத்த பேட்டியா என கேட்கவும் மீடியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களை வைத்து பார்க்கும் போது, இது இலங்கை ராணுவத்தின் வழக்கமான மோசடி வேலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.