திண்டுக்கல்லில் டாக்டர் கடத்தல்-மர்மம் நீடிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவர் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். அவரை கடத்தியது யார், எதற்காக கடத்தினார்கள் போன்ற விவரம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் உள்ள பழனி சாலையில் மருத்துவமனை நடத்தி வருபவர் பாஸ்கரன்(70). இவருக்கு வனிதா என்ற மனைவியும், சித்ரா அனிதா என்ற இரு மகள்களும், கணேசன் என்ற மகனும் உள்ளனர்.
இரு மகள்களும் திருமணம் முடிந்து சென்னை மற்றும் மதுரையில் வசிக்கின்றனர். டாக்டரான மகன் கணேசன் தந்தையுடன் மருத்துவமனையை கவனித்து வருகிறார்.
ஏஎம்சி சாலையில் வசித்து வரும் பாஸ்கரன் நகரில் கைராசியான டாக்டர் என பெயர் எடுத்தவர். இதையடுத்து ஊருக்குள் அவருக்கு நல்ல பேரும், மதிப்பும் உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு தனது வீட்டில் இருந்து காஸ்மோ பொலிடன் கிளப்புக்கு செல்ல அவர் கிளம்பினார். இதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது வீட்டுக்கு அருகே வெள்ளை நிற காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை அப்படியை காருக்குள் இழுத்து போட்டு கடத்தியது.
இதையடுத்து பாஸ்கரன் சத்தம்போட்டு அருகிலிருந்தவர்களை காப்பாற்றுமாறு உதவிக்கு அழைத்தார். அவரது அபாய ஒலி கேட்ட அவரது வீட்டு வாட்ச்மேன், அந்த பக்கமாக வந்த கிளப் நிர்வாகி ராஜா ஆகியோர் ஓடி வந்தனர்.
ஆனால், அதற்குள் அந்த மர்ம கும்பல் காரில் பாஸ்கரனுடன் அந்த இடத்தை விட்டு மின்னல் வேகத்தில் எஸ்.பி. அலுவலகம் வழியாக சென்று மறைந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அவரது குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த மர்ம கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் அவரை கடத்தியிருக்கலாம் என்றும், அவர்களிடம் இருந்த போன் வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் அந்த மர்ம கும்பலை கண்டுபிடிக்க திண்டுக்கல் போலீஸ் டிஐஜி அமரேஷ்பூஜாரி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications