மகாராஷ்டிராவில் 1200 பன்றிகள் மர்ம சாவு - ஸ்வைன் காரணமா என பீதி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 1200 பன்றிகள், 500 கோழிகள், 150 ஆடுகள் கண்டுபிடிக்க முடியாத கொடிய நோய் ஒன்றுக்கு பலியாகி உள்ளது. உலகம் முழுவதும் ஸ்வைன் ப்ளூ மிரட்டி வரும் நிலையில் இது மகாராஷ்டிராவில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மகாராஷ்டிராவில் ஜல்கோன் மாவட்டத்தில் தாகிவாத் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களுக்காக திடீர் திடீரென்று கூட்டம் கூட்டமாக பன்றிகளும், ஆடுகளும் செத்து விழுந்தன. நேற்று வரை அங்கு 1200 பன்றிகளும், 150 ஆடுகளும் இறந்துள்ளதாக தெரிகிறது.
அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள கேட்கோன் கிராமத்தில் 500 கோழிகள் காய்ச்சல் வந்து இறந்துள்ளன. மெக்சிகோ, அமெரிக்கா என உலகம் முழுமைக்கும் சுமார் 15 நாடுகளில் ஸ்வைன் ப்ளூ பரவியுள்ள நிலையில் பன்றிகளும், ஆடுகளும், கோழிகளும் பலியானது மகாராஷ்டிராவை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால், இந்த வளர்ப்பு விலங்குகளின் மரணத்துக்கு அகோர வெயில் தான் காரணம் என அம்மாவட்ட சுகாதார துறை அலுவலர் ஸ்ரீசத் என்பவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சமீபகாலமாக மகாராஷ்டிராவில் வெயில் சுட்டெரிக்கிறது. ஜல்கோன் மாவட்டத்தில் 47.5 டிகிரி செல்சியஸ் வெயில் உள்ளது. இதன் காரணமாக தான் பன்றிகள் இறந்துள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications