விடுதலைப் புலிகளின் திடீர் தாக்குதலில் 150 சிங்கள வீரர்கள் பலி
முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டம் ரெட்டை வாய்க்கால் என்ற இடத்தில் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 150 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
புதுக்குடியிருப்புக்கு கிழக்கே உள்ளது ரெட்டை வாய்ககால். இப்பகுதியில் புலிகளின் அரண்களைத் தடுத்து உள்ளே புக ராணுவம் முயற்சித்து வருகிறது. ஆனால் இதை விடுதலைப் புலிகள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர்.
இந்தப் பகுதி தவிர தரைவழியாக மூன்று முனைகளில் முன்னேறுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள படையினர், முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையின் தாக்குதல்கள் மூலம் உள்ளே புக முயன்று வருகின்றனர்.
ரெட்டை வாய்க்கால் பகுதியில், வெள்ளிக்கிழமை காலை வரை பத்து முறை இலங்கைப் படைகள் முன்னேற முயற்சித்தனர்.
ஆனால் விடுதலைப் புலிகள் இதை கடுமையாக எதிர்த்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதில் ராணுவத்திற்கு கடும் பாதிப்பும், சேதமும் ஏற்பட்டது. 150 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முதல் வன்னி போர் முனையில் விடுதலைப் புலிகள் ஏழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ரெட்டைவாய்க்கால் பகுதியிலும் ராணுவ டிரக் ஒன்றை, கரும்புலிகள் படையைச் சேர்ந்தவர்கள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி பெரும் இழப்பை ஏற்படுத்தினர்.
ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் 600 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.