ஏழைகளின் வாழ்வை மாற்றுவேன் - ஏழ்மையை விரட்டுவேன்: விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வென்றால் தமிழகத்தை ஏழ்மை இல்லாத மாநிலமாக மாற்றி காட்டுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மே தினத்தை தேமுதிகவினர் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். கட்சி தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.
பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் யுவராஜை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
கொளத்தூரில் அவர் பேசுகையில்,
கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் மாறி மாறி முதல்வர்கள் வந்தார்கள். ஆனால், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. எனக்கு சந்தர்ப்பம் கொடுத்து, 40 தொகுதிகளிலும் எங்களை வெற்றிபெற செய்தால், தமிழகத்தில் ஏழ்மை இல்லாமல் மாற்றிக் காட்டுவேன்.
சட்டசபையில் வைத்து, பஸ் கட்டணம் மறைமுக உயர்த்தப்பட்டுள்ளதாக முன்பு நான் குறிப்பிட்டேன். ஆனால் திமுக அதை மறுத்தது. ஆனால் இப்போது பஸ் கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள்.
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் கியாஸ் கொண்டு வருவார்களாம். ஆனால், இங்கு ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொன்றுக்கு குடிநீர் கொண்டு வர முடியாதாம். நாங்கள் வெற்றி பெற்றால் டெல்லியில் கைகட்டி நிற்க மாட்டோம். தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவோம்.
எல்லா தொழிலிலும் இப்போது லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. வருமானம் என்பது செருப்பை விட தேய்ந்து போய்விட்டது என்றார் விஜயகாந்த்.
பெண் குழந்தைகளுக்கு ரூ. 1 லட்சம்...
இதை தொடர்ந்து திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சுரேசை ஆதரித்து செங்குன்றத்தில் பேசுகையில், தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற பேரில் ஒரு வங்கி தொடங்குவேன். இதில் பெண் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் வர்த்தக மையம் அமைப்பேன் என்றார் விஜயகாந்த்.