பண பட்டுவாடா-திமுக பிரமுகரை கையும் களவுமாக பிடித்த அதிமுகவினர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு கவர்களில் பணம் போட்டு பட்டுவாடா செய்த திமுக பிரமுகரை, அதிமுகவினர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
தூத்துக்குடி அருகேயுள்ள தட்டம்பாறை பகுதிகளான கொல்லம் பருப்பு, செட்டியூரணி பகுதிகளில் திமுகவினர் ஓட்டுக்காக வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக அதி்முகவினருக்கு தகவல்கள் வந்தன. அதிமுக நிர்வாகிகள் அங்கு விரைந்தனர்.
அங்கு சென்ற அதிமுகவினர் வாக்களர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுக பிரமுகரை பணத்துடன் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை தட்டம்பாறை போலீசில் ஓப்படைத்தனர்.
விசாரணையில் பணம் கொடுத்து கொண்டிருந்தவர் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்த ஆட்டோ கோபால் என்பது தெரிய வந்தது. இவரது மனைவி ராமலெட்சுமி திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 26 கவர்களில் 200 ரூபாய் வீதம் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 200 ரூபாயும் தட்டபாறை போலீஸ் நிலையத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தட்டம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், வேட்பாளர் சிந்தியா பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் தூத்துக்குடி எஸ்.பியிடம் புகார் கொடுத்தனர்.