பஸ் கட்டணக் குறைப்பு விதி மீறல்: தேர்தல் ஆணையம்- விளக்கமளிக்க விரைகிறார் ஸ்ரீபதி
டெல்லி: தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது தேர்தல் விதிமீறல். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி விரைகிறார்.
தமிழகத்தில் ஏகப்பட்ட விசேஷ பெயர்களில் ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களில் இருந்து வந்த கட்டணங்களைக் குறைத்து சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.
இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல், அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியிருந்தார்.
இது பற்றி மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பஸ் கட்டணங்களைக் கூட்டவும் இல்லை, குறைக்கவும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்து கட்டணங்கள்தான் வசூலிக்கப்படுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு விளக்கமளித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாக கருதுகிறோம். எனவே இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் தர வேண்டும் என தேர்தல் ஆணையம் ஸ்ரீபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து இன்று டெல்லி செல்கிறார் ஸ்ரீபதி.