ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை
மதுரை: சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
எந்த அணியிலும் சாமியை சேர்க்கவில்லை. பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த சாமி, யாரும் அழைக்காமலேயே பாஜகவுடன் போய் ஒட்டிக் கொண்டார். இவரது கட்சியும் லோக்சபா தேர்தலில் களத்தில் உள்ளது.
இந்நிலையில் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அதில்,
இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அளித்த டிவிடியின் அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்று கூறி வருகிறார்.
ஆனால் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மறுத்துள்ளார். இலங்கையில் உள்ள அகதி முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களை விட மிகவும் நன்றாக உள்ளன என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
எனவே ஜெயலலிதா சாத்தியமற்ற தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான தேசப்பற்று மிகுந்த கொள்கைகளுக்கு அவர் மீண்டும் திரும்ப வேண்டும். இப்படி அவர் செய்தால் அவருடைய புகழ் மேலும் கூடுமே தவிர குறையாது.
தன்னை சுற்றியுள்ள புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு அவர் அரசியலில் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றார் சுப்பிரமணியசாமி.












Click it and Unblock the Notifications