கருணாநிதி போன பின் வந்த ஜெ.- நேருக்கு நேர் தவிர்ப்பு
சென்னை: தமிழக அரசியலின் இரு பெரும் துருவங்களான முதல்வர் கருணாநிதியும், அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும் சூழ்நிலை சென்னை விமான நிலையத்தில் உருவானது. இருப்பினும் கருணாநிதி கிளம்பிய பின்பு ஜெ தாமதாக வந்ததால் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம் தவிர்க்கப்பட்டு விட்டது.
திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்துவிட்டு நேற்று முதல்வர் பகல் 12.10 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் விமானம் சிறிது நேரம் தாமதமானதால் பகல் 1.25 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே நேரத்தில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இருந்து கோவைக்கு பகல் 2 மணிக்கு தனது ஹெலிகாப்டரில் பயணம் செய்யவிருப்பது தெரியவந்தது.
இருவரும் தமிழகத்தின் முக முக்கியமானவர்கள் என்பதால் விஐபிக்களுக்கான விமான நிலைய வாயில் 1ல் இரு கட்சியினரும் கூட்டமாக காத்திருந்தனர். இதனால் அங்கு லேசான பரபரப்பு காணப்பட்டது. மேலும் இரு தலைவர்களும் விமான நிலையத்தில் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு உருவானது.
இந்நிலையில் கருணாநிதி வந்த விமானம் தரையிறங்கியது. அதிலிருந்து இறங்கிய கருணாநிதி 1.35 மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளியேறினார். அவர் செல்லும் வரை ஜெயலலிதா வரவில்லை. இதையடுத்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்வது தவிர்க்கப்பட்டது.
கருணாநிதி சென்ற பின் ஐந்து நிமிடங்கள் கழித்து ஜெயலலிதா 1.40 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்து கோவை சென்றார்.












Click it and Unblock the Notifications