இந்தியா போர் நிறுத்தமே கோரவில்லை-கோதபய
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் கடந்த மாதம் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர். அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு கோதபய பேட்டி அளித்துள்ளார்.
அதில், கூட்டணிக் கட்சியான திமுகவின் நிர்பந்தம் காரணமாகவே இந்திய அரசு இலங்கைக்கு நெருக்குதல் அளித்து வருவதாக செய்திகள் வெளியாவது குறித்த கேளிவிக்கு பதிலளித்த அவர்,
சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் எங்களை வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தினர்
விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
போர் பகுதியிலிருந்து, அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது தி/ருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று உறுதியளித்தனர் என்றார்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன. புலம்பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என்றார் கோதபய.
இதன்மூலம் நாராயணன், மேனன் ஆகியோரை வைத்துக் கொண்டு மத்திய அரசு போர் நிறுத்த விஷயத்தில் தமிழகத்தை ஏமாற்றி வருவது மீண்டும் தெள்ளத் தெளிவாகிறது.