கடற்புலிகள் தாக்குதல்- 2 கடற்படை படகுகள் தகர்ப்பு
முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை நடத்திய அதிரடித் தாக்குதலில் இலங்கைக் கடற்படையின் இரண்டு அதி நவீன தாக்குதல் படகுகள் தகர்க்கப்பட்டன. கடந்த சில நாட்களில் தகர்க்கப்பட்டுள்ள 3வது கடற்படை படகுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் பகுதியில், கடலிலிருந்து தமிழ் மக்கள் தஞ்சமடைந்துள்ள தரைப் பகுதியை நோக்கி அதி நவீன தாக்குதல் படகுகள் மூலமாக ராக்கெட்களை வீசி தாக்கி வந்தது இலங்கை கடற்படை.
இந்த நிலையில் இன்று அதிகாலை, இரண்டு கடற்படைப் படகுகளை விடுதலைப் புலிகளின் கடற் பிரிவு வீரர்களான கடற்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தி இந்த இரண்டு படகுகளையும் தகர்த்தனர்.
இதனால் இப்பகுதியில் கடற்படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் புலிகள் ஈடுபடுத்தியது, ஆளற்ற தாக்குதல் படகு என்பது குறிப்பிடத்தக்கது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இதை இயக்கலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை இதேபோன்ற ஒரு படகை புலிகள் தகர்த்தனர். அதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமாற்றித் தாக்கிய புலிகள்...
இன்று நடந்த படகுத் தாக்குதலில், விடுதலைப் புலிகள், கடற்படையினரை தந்திரமாக ஏமாற்றி தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
அதாவது ஆளற்ற தங்களது படகை ரிமோட் கன்ட்ரோல் மூலம் கடல் பகுதியில் வேகமாக செலுத்தியுள்ளனர். படு வேகமாக ஒரு படகு போவதைப் பார்த்த கடற்படையினர் தங்களது இரு தாக்குதல் படகுகள் மூலம் அதை விரட்டிச் சென்றனர்.
ஆனால் அருகே போன பின்னர்தான் அது ஆளற்ற படகு என்பதும், விடுதலைப் புலிகள் விரித்த வலையில் தாங்கள் சிக்கிக் கொண்டதும் அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.
ஆனால் சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்த கடற்புலிகள், கடற்படையினரின் இரு படகுகளையும் தகர்த்து விட்டனர்.
முள்ளி வாய்க்கால் பகுதியில், இந்த இரு படகுகளும்தான் பெருமளவில் தமிழ் மக்கள் மீது தாக்குதலை நடத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தாக்குதலில் முக்கியமான கடற்படைத் தளபதி ஒருவர் பலியாகிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
புலிகளிடம் விமானங்கள் இல்லை..
இதற்கிடையே விடுதலைப் புலிகளிடம் தற்போது ஒரு விமானம் கூட இல்லை என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
கொக்கவில் பகுதியில் புலிகளின் விமானத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஒன்றை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. இருப்பினும் புலிகளிடம் தற்போது ஒரு விமானமும் இல்லை எனவும் அது தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி கொழும்பில் புலிகள் நடத்திய இரு விமான தாக்குதல்களுடன் அவர்களது விமானங்கள் காலியாகி விட்டதாகவும் ராணுவம் கூறுகிறது.