சரத்குமாரை தடுத்த திமுகவினர் - கார் மீது தாக்குதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை திமுகவினர் தடுத்து நிறுத்தி ரகளை செய்தனர். அப்போது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கராத்தே சரவணனை ஆதரித்து சரத்குமார் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார்.
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு 3.50 மணி அளவில் முத்தையாபுரம் வந்தார்.
அங்குள்ள தோப்புதெருவில் சரத்குமார் திறந்த வேனில் ஆதரவு கேட்டு சென்றார். அப்போது அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் இருந்து வந்த சிலர் தி.மு.க. கொடியுடன் வந்து வழிமறித்தனர்.
உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சினை? நான் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். ஆதரவு கேட்டுவிட்டு சென்று விடுவேன் என்று அவர்களிடம் சரத்குமார் கூறினர். இதையடுத்து வழிமறித்த திமுகவினர் விலகினர்.
அப்போது சரத்குமாரின் காருக்கு பின்னால் 3-வதாக வந்து கொண்டிருந்த நகர துணைச் செயலாளர் விஜயகுமார் காரின் பின்புறக் கண்ணாடியை உருட்டுக்கட்டையால் ஒரு கும்பல் தாக்கியது. இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியினர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் மீது புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் விருதுநகர் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் மீது செங்கல் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சரத்குமாரின் காரை தடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications