காங்கிரசுக்கு ஆதரவே தர மாட்டோம்-இந்திய கம்யூ.
தென்காசி: இனி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, அதன் ஆதரவோடு அமையும் ஆட்சிக்குக் கூட ஒருபோதும் இடதுசாரிகள் ஆதரவு தர மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
அக் கட்சியின் தென்காசி தொகுதி வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து ராஜா பிரச்சாரம் செய்தார். பின்னர் குற்றாலத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைய வேண்டும். அதுபோல மதவெறி கொண்ட பாஜகவும் ஆட்சிக்கு வரக் கூடாது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உள்ள அணி மாபெரும் வெற்றி பெரும் என்று தெரிகிறது. இக் கூட்டணிக்கு பெரும் ஆதரவு அலை வீசுகிறது.
காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தமிழகமெங்கும் எதிர்ப்பு அலை வீசுகிறது. ஒரு புறம் ஆதரவு அலை, மறுபுறம் எதிர்ப்பு அலை.
மாற்று அணி எங்கே இருக்கிறது என்று கேட்கும் காங்கிரசும் பாஜகவும் இப்போது அச்சத்தில் உள்ளனர். மாற்று அணி குறித்து பயமில்லை எனில் அதுபற்றி பேசவே வேண்டாமே.
அகில இந்திய அளவில் எங்கள் அணி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு வேண்டும். அதே சமயம் அணுசக்தி ஓப்பந்தத்தை கைவிடமாட்டார்களாம். இனி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, அதன் ஆதரவோடு அமையும் ஆட்சிக்குக் கூட இடதுசாரிகள் ஒருபோதும் ஆதரவு தர மாட்டோம்.
மதுரை தொகுதியில் முதல்வர் மகன் என்ற மாமதையில் அழகிரி போட்டியிடுகிறார். மதுரை மக்கள் எதற்கும் பணியாதவர்கள். மதுரை அரசியலில் விழிப்புணர்வு பெற்ற மக்கள் நிறைந்த தொகுதி அது. அங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் நிச்சயம் வெல்வார் என்றார்.