கருணாநிதி மிகச் சிறந்த நடிகர்: ராமதாஸ் 'சர்டிபிகேட்'
சென்னை: இலங்கைப் பிரச்சனையில் உண்ணாவிரத நாடகம் நடத்தியதன் மூலம் முதல்வர் கருணாநிதி மிகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து தாம்பரம் அருகே பிரச்சாரம் செய்த ராமதாஸ் பேசுகையில்,
திமுக அரசிடம் மது ஒழிப்பு நடவடிக்கை வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அரசு ஒரு மணி நேரம் மட்டும் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்தது. கல்விக்கூடங்களை தனியார்மயமாக்கிய அரசு மதுக்கடைகளை மட்டும் அரசுடமையாக்கியுள்ளது.
திமுக வேட்பாளர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள். டி.ஆர்.பாலு கப்பல் முதலாளி ஆவார். எங்கள் கட்சி வேட்பாளர்கள் சாதாரண பொறுப்பில் இருந்து மேல்நிலைக்கு வந்தவர்கள்.
தனி ஈழம் அமைத்துத் தருவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் இதற்கு கருணாநிதி தனி ஈழம் எப்படி அமையும் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்தால் தனி ஈழம் உருவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை பிரச்சனை குறித்து கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காலையில் டிபன் சாப்பிட்டு முடித்துவிட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்வதற்காக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். தனது உண்ணாவிரத போராட்டத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிரந்தரமாக ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், அன்றைய தினமே 142 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
உண்ணாவிரதம் நடத்தி நாடகமாடியதன் மூலம் கருணாநிதி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications