இலங்கை-ஜெவுக்கு ஏன் திடீர் அக்கறை?: பண்ருட்டி
கள்ளக்குறிச்சி: இலங்கைப் பிரச்சனையில் ஜெயலலிதாவுக்கு இவ்வளவு நாள் இல்லாத அக்கறை தேர்தல் வந்ததும் ஏன் திடீரென வந்தது என்று நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளரான விஜய்காந்தின் மச்சான் சுதீஷை ஆதரித்து பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. மக்களுடன் மட்டும் கூட்டணி வைத்துள்ளோம். மற்ற அரசியல் கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள போட்டிபோட்டன. ஆனால், மக்களுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என விஜயகாந்த் கூறிவிட்டார்.
மக்களை நம்பியே தனித்து போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் கூட்டணியை நம்பியும், பணத்தை நம்பியும் போட்டியிடுகின்றன.
தேமுதிகவைப் போல எந்த அரசியல் கட்சியும் தொண்டர்களை முறையாக வழி நடத்துவதில்லை.
திமுக, அதிமுக இரண்டுக்கும் கொள்கைரீதியில் பெரிய வேறுபாடு இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையில் திமுக தலைவர் கபட நாடகமாடுகிறார். ஜெயலலிதாவுக்கு இந்த விவகாரத்தில் இவ்வளவு நாள் இல்லாத அக்கறை தேர்தல் வந்ததும் திடீரென வந்துவிட்டது ஏன் என்றார்.