எஸ்.எஸ்.சந்திரன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
நெல்லை: தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தொடர்ந்து அதிமுகவுக்கு பிரசாரம் செய்த நடிகர் எஸ் எஸ் சந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுகவை சேர்ந்த நடிகர் எஸ்எஸ் சந்திரனுக்கு மத்திய சென்னையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் அங்கு திமுக சார்பில் தயாநிதிமாறன் போட்டியிடுவதால் எஸ்எஸ் சந்திரன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முகமது அலி ஜின்னா களமிறக்கப்பட்டார். தற்போது எஸ்எஸ் சந்திரன் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு அவர் நெல்லை தொகுதி திசையன்விளை பகுதியில் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். அவர் இரவு 10 மணியை தாண்டி அப்பகுதியில் பிரசாரம் செய்துள்ளார்.
இதையடு்த்து பாதுகாப்பு பணியில் இருந்த திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், எஸ்எஸ் சந்திரனிடம் நேரம் 10.10 ஆகிவிட்டது இதற்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என கூறியுள்ளார்.
அதற்கு எஸ்எஸ் சந்திரன் மைக் இல்லாமல் பிரச்சாரம் செய்யலாம் என்று கூறினாராம். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எஸ்எஸ் சந்திரன், இன்ஸ்பெக்டரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், எஸ்எஸ் சந்திரனிடம் நீங்கள் இத்துடன் பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என்று கூறி விட்டு போலீஸ் நிலையம் சென்றார்.
பின்னர் எஸ்எஸ் சந்திரன் தேர்தல் விதியை மீறி இரவு 10 மணி்க்கு மேல் பிரச்சாரம் செய்ததாகவும், போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications