பிரிட்டனில் தங்க 2 ஈழத் தமிழர்களுக்கு கோர்ட் அனுமதி
லண்டன்: இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து கோர்ட் கூறியுள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் அது அனுமதி அளித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த அவர்கள் அண்ணன் தங்கை ஆவர். கடந்த 2003ம் ஆண்டு இருவரும் லண்டன் வந்தனர். இலங்கையில் தாங்கள் சித்திரவதைக்கும், கற்பழிப்புக் கொடுமைக்கும் ஆளானதாக அவர்கள் கூறி அகதிகளாக தங்களை அங்கீகரிக்க கோரி இங்கிலாந்து குடியேற்றத் துறைக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால் அதை குடியேற்றத் துறை ஏற்கவில்லை. மேலும் இருவரையும் நாடு கடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இருவரும் அப்பீல் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், தங்களை நாடு கடத்தினால் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செட்லி, ஆர்டன், மோசஸ் ஆகியோர், இருவரையும் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். மேலும் நாமே அவர்களை கொன்றது போலாகி விடும். இது ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டுப் பிரகடனத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் சகோதர, சகோதரிகள் இங்கிலாந்திலேயே தங்கவும் அவர்கள் அனுமதி அளித்துள்ளனர். இங்கிலாந்து அரசுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளதாம். இதுகுறித்து இங்கிலாந்து குடியேற்றப் பிரிவுத்துறை அமைச்சர் பில் ஊலஸ் கூறுகையில், இது பொது அறிவே இல்லாத தீர்ப்பு. எதிர்காலத்தில் இங்கிலாந்து சட்டவிரோதமாக வருவோரும், அகதிகளும் இந்தத் தீர்ப்பைக் காட்டி இங்கேயே தங்க முயற்சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதை எதிர்த்து நாங்கள் லார்ட்ஸ் சபையில் அப்பீல் செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications