அதிமுகவே இல்லாமல் போக வேண்டும்-கனிமொழி
விழுப்புரம்: இந்தத் தேர்தலோடு அதிமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல் செய்ய வேண்டும் என்றார் திமுக எம்பியான கனிமொழி.
விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சாமிதுரையை ஆதரித்து திறந்த ஜீப்பில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்த அவர் பேசுகையில்,
தமிழகத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆட்சியில்தான் மக்கள் நிம்மதியாக உள்ளனர். விவசாயிகள் வாங்கியிருந்த ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியவர் தலைவர் கலைஞர். தேர்தல் அறிக்கையில் ரூ.2 க்கு ஒரு கிலோ அரிசி என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் ரூ.1க்கே ஒரு கிலோ அரிசி வழங்கி வருகிறார்.
சாதனைகள் செய்த காரணத்தினால்தான் இன்று தமிழகம் இந்திய துணைக் கண்டத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறது. கலைஞர் எல்லா சமுதாய மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்று சம நீதி வழங்கி வருகிறார். அதனால்தான் திமுக கூட்டணியை அனைத்து தரப்பு மக்களும் ஆதரிக்கின்றனர்.
ஆனால் இதனைக் கண்டு பொறாமை கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நம் அரசின் மீது குறை சொல்லவும் முடியாமல், குற்றம் கண்டுபிடிக்கவும் முடியாமல் திணறுகின்றார்.
மாறாக தேர்தலில் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்.
14 வயதில் திருவாரூரில் தமிழர் நலன் காக்க, தமிழர் மானம் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கொடி பிடித்து அரசியலுக்கு வந்தவர் கலைஞர்.
கலைஞரைப் பார்த்து ஜெயலலிதா மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் அவரின் உடல்நிலை சரியில்லாததை பார்த்து கருணாநிதி நன்றாக நடிக்கிறார் என்கிறார். யார் நடிப்பது என்றும், யார் நாடகம் ஆடுவது என்றும் தமிழக மக்களுக்கு தெரியும்.
மக்கள் நலனில் அக்கரை செலுத்தாத ஜெயலலிதாவின் போலி வேஷத்தை இந்த தேர்தலில் நீங்கள் கலைத்திட வேண்டும். இந்த தேர்தலில் அவரை தூக்கியெறிய வேண்டும். இந்தத் தேர்தலோடு அதிமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல் செய்ய வேண்டும் என்றார்.