கர்ணனிடம் வரம் கேட்ட கிருஷ்ணனை போல..
சென்னை: முதல்வர் கருணாநிதி உழைக்கப் பிறந்தவர், அவர் ஓய்வெடுக்க மாட்டார். அவர் உயிரோடு இருப்பது ஜெயலலிதாவுக்கு இடைஞ்சலாக இருக்கிறது போலும் என கூறியுள்ளார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
நிரந்தர ஓய்வு என்றால் என்ன அர்த்தம்...
இதுதொடர்பாக வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலூரில் பேசிய ஜெயலலிதா முதல்வர் கருணாநிதியை ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார். அவருடைய கட்சிக்காரர்களை பார்த்து முதல்வர் கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக பொதுமேடையில் பேசி இருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம் என்பதை காவல்துறையினர்தான் கண்காணிக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி உயிரோடு இருப்பது ஜெயலலிதாவிற்கு அவ்வளவு இடைஞ்சலாக இருக்கிறது போலும். கருணாநிதியை தேர்தலில் வெற்றி கொள்ளவும் அவரால் முடியவில்லை. எனவே கர்ணனிடம் வரம் கேட்ட கிருஷ்ணனை போல கருணாநிதியிடமே ஓய்வெடுத்துக் கொள்ள சொல்லி வேண்டி கேட்டுக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
பொதுவாக கருணாநிதியின் வீட்டாரும், உறவினர்களும், மருத்துவர்களும் அடிக்கடி கருணாநிதியிடம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். ஆனால் அவர்கள் சொல்லியே கேட்காத கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியா ஓய்வெடுக்க போகிறார்?
கருணாநிதியை பொறுத்தவரை- அவர் இருக்கும் வரை உழைத்துக் கொண்டிருக்க கூடியவரே தவிர ஓய்வெடுக்கக் கூடியவரல்ல. எனவே ஜெயலலிதாவின் முயற்சி வெற்றி பெறக்கூடிய ஒன்றல்ல.
கருணாநிதி உழைக்க பிறந்தவர். அவரால் ஓய்வெடுக்க முடியாது. பொதுவாக, மருத்துவமனையில் இருப்பவர்களை யாரும் கேலியோ, கிண்டலோ செய்ய மாட்டார்கள். அது மனித உணர்வு மிக்கவர்களின் செயல்.
எம்.ஜி.ஆர் மருத்துவமனையிலே இருந்த போது, முதல்வர் கருணாநிதி "நானும் பிரார்த்திக்கிறேன்'' என்று தொடர் கட்டுரை எழுதினார். எம்.ஜி.ஆர் மறைந்த போது ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணி அளவிலேயே முதல் ஆளாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தியவர் முதல்வர் கருணாநிதி. அது போலவே நாவலர் மறைந்த போதும் டெல்லி விமானத்தில் இருந்து கீழே இறங்கியதும், நேராக நாவலர் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியவர் கருணாநிதி. இதெல்லாம் இதயம் இருப்போரின் செயல்களாகும்.
முதல்வர் சிகிச்சையிலே இருப்பதால் அவருடைய பணியிலே ஏதாவது சுணக்கம் ஏற்பட்டுள்ளதா?. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உடல் நலம் நன்றாக இருந்த போதிலும் நூற்றுக்கணக்கான கோப்புகளை பார்க்காமல் வைத்திருந்தார்.
ராமதாஸ் எப்படிச் சொல்லலாம்...
ஆனால் இப்போது எந்தவொரு கோப்பும் முதல்வர் கருணாநிதியின் கையெழுத்துக்காக காத்திருக்கவில்லை. அவருடைய எந்தப்பணியிலும் தாமதம் இல்லை. எனவே, முதல்வர் கருணாநிதியை ஓய்வு எடுக்குமாறு கூறுவதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தவிதமான தகுதியோ, உரிமையோ கிடையாது.
கருணாநிதியை ராஜினாமா செய்யச்சொல்ல டாக்டர் ராமதாஸ் யார்?. கருணாநிதி போட்ட பிச்சையினால், அவர் அளித்த ஆதரவால், அவருடைய கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த வாக்குகளால் வெற்றி பெற்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்றளவும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் உறுப்பினராக இருக்கிற நிலையில் கருணாநிதியை பார்த்து ராஜினாமா செய் என்று எந்த தகுதியை வைத்துக் கொண்டு டாக்டர் ராமதாஸ் சொல்கிறார்? என்று கேட்டுள்ளார் வீராசாமி.












Click it and Unblock the Notifications