தவறாக பேசும் ஜெவுக்கு பாடம் புகட்டுங்கள்-ஸ்டாலின்
கரூர்: கருணாநிதியின் உண்ணாவிரத்தை நாடகம் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டுங்கள் என்று கரூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக பொருளாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூரில் திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமியை ஆதரித்து திமுக பொருளாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஸ்டாலின் பேசுகையில்,
தேர்தலுக்கு தேர்தல் ஓட்டு கேட்டு வருபவர்கள் அல்ல நாங்கள். தேர்தல் முடிந்தாலும் உங்களை தேடி வருபவர்கள் நாங்கள் தான். தேர்தலுக்கு தேர்தல் புதிதாக வரும் கட்சிகள் உண்டு. அப்படி வரும் கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும்.
சட்டசபை தேர்தலில் ரூ. 2க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். ஆனால் அந்த திட்டம் நடக்காது என்று ஜெயலலிதா கேலி, கிண்டல் பேசினார். பின்பு குவாட்டர் வாங்கினால் குவாட்டர் இலவசம் என்பது போல 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ அரிசி இலவசம் என்றார்.
ஆனால் தமிழக மக்கள் ஜெயலலிதாவை நம்பவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் இட்ட முதல் கையெழுத்தே அது தான். பின்னர் அதனை மாற்றி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அறிவித்தார்.
விவசாயிகளின் ரூ. 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை முதல்வர் கருணாநிதி தள்ளுபடி செய்தார். இதில் பயனடைந்தவர்கள் யார் என்றால் திமுகவைவினரை விட அதிமுகவினர் தான் அதிகம்.
முதல்வர் கருணாநிதி இந்த வயதிலும் முதுகுதண்டில் நடந்த ஆபரேஷனையும் பொருட்படுத்தாமல் இலங்கை தமிழர்களை காக்க யாரிடமும் கூறாமல் தனியாக வந்து உண்ணாவிரதம் இருந்தார். இது நாடகமா. இப்படி அபாண்டமாக கூறும் ஜெயலலிதாவுக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டாமா ?
குடும்பமே இல்லாதவற்கு கொடநாட்டில் எதற்கு 40, 50 பெட்ரூம் உள்ள பங்களா ? சிறுதாவூரில் எதற்கு பங்களா ? எனவே முதல்வர் கருணாநிதி பற்றி தவறாக பேசி வரும் ஜெயலலிதாவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.