லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒரே இரவில் வீட்டுக்கு அனுப்பிய ஜெ. எப்படி நல்லாட்சி தருவார் - விஜயகாந்த்
சென்னை: ஒரே இரவில் லட்சணக்கணக்கான தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பிய ஜெயலலிதா எப்படி நல்லாட்சியை தருவார்? என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தேமுதிக. வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து தேமுதிக. தலைவர் விஜயகாந்த் ஆலந்தூரில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
மண்டித்தெருவில் அவர் பேசுகையில், தமிழகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்து குழிதோண்டி புதைத்து விட்டனர்.
40 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வை வெற்றி பெற செய்தால், தொழில் பெருக வர்த்தக மையம், தனி மனித வருமானத்தை உருவாக்க தமிழ்நாடு வங்கி ஏற்படுத்தி தொழில் செய்ய ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.
பெண்களின் வாழ்க்கையில் முன்னேற மாவட்டந்தோறும் கலைக் கல்லூரி தொடங்கப்படும். கூரை வீடுகளை கல் வீடுகளாக மாற்றி அமைத்து தரப்படும். ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு தேடி வந்து வழங்கப்படும். நல்ல குடிநீர், சாலை வசதிகள் ஏற்படுத்தி தருவேன்.
நான் காசு பணத்திற்கு ஆசைப்படுவன் கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். தெய்வத்தையும், மக்களை நம்பியும் தேர்தலை சந்திக்கிறேன்.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திற்கு பின் மின்சார உற்பத்தியை யாரும் கவனிக்கவில்லை. சாலைகளை மேம்படுத்தியதாக 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்க சாவடிகளை அமைத்து பொதுமக்களிடம் ரூ.50 முதல் ரூ.200 வரை கட்டணங்களை பெற்று சாலை புரட்சி என பேசக் கூடாது.
சுயநலம் இல்லாதவர் என ஜெயலலிதா பேசி வருகின்றார். சுயநலம் இல்லாதபோது ஏன் வாஜ்பாய் ஆட்சியை கலைத்தீர்கள்? ஒரே இரவில் லட்சணக்கணக்கான தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பியவர் எப்படி நல்லாட்சியை தருவார்? ஆடு, கோழியை மக்கள் வெட்டக்கூடாது என்று எதிர்த்து விட்டு குருவாயூர் கோவிலுக்கு யானை அளித்தவர் ஜெயலலிதா என்றார் விஜயகாந்த்.