மலிவு விலை வீடுகள்: டாடாவும் களமிறங்கியது!!
இந்த வகை வீடுகளைக் கட்டும் பணியில் ஏற்கெனவே பெங்களூரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் கூட்டாக முயன்று வருவது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இப்போது அதே போன்றதொரு திட்டத்தை டாடா நிறுவனமும் அறிவித்துள்ளது.
இந்த திட்டப்படி, ரூ.4 லட்சத்துக்கும் குறைவான விலைக்கு புத்தம் புதிய வீடுகளை டாடா ஹவுஸிங் நிறுவனம் கட்டித் தரும். இதில் ஒரு படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிப்பறை மட்டுமே இருக்கும். இதன் சரியான விலை ரூ.3.91 லட்சம்.
மும்பையிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள போய்ஸர் என்ற பகுதியில் இந்த திட்டத்தின் முதல் பகுதி கட்டப்பட்டு வருகிறது.
அடுத்த 24 மாதங்களுக்குள் இந்தத் திட்டம் முழுமையாகத் தயாராகிவிடும் என்றும், முன்பதிவு செய்தவர்களுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் டாடா ஹவுஸிங் நிறுவன நிர்வாக மேலாளர் புரோடின் பானர்ஜி கூறியுள்ளார்.
சுப க்ரஹா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தைப் போலவே கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதியிலும் வீடுகளை உருவாக்குகிறது டாடா. ஆனால் இவை அளவில் சற்று பெரியதாக இருக்குமாம். ஒரு ஹால், படுக்கையறை, சமையல் அறை மற்றும் குளியலறை கொண்டதாக இந்த வீடுகள் இருக்கும். விலை ரூ.6.7 லட்சம்.
ரூ.10 முதல் 15 லட்சத்துக்குள் தனி வீடுகளைக் கட்டித் தரவும் திட்டமுள்ளதாக பானர்ஜி தெரிவித்தார்.