தேர்தலை புறக்கணித்த 'ஷூ' புகழ் ஜர்னைல் சிங்
ஏப்ரல் 7ம் தேதி ப.சிதம்பரம் மீது ஜர்னைல் சிங் வீசிய ஷூவினால்தான் லோக்சபா தேர்தலில் நிறுத்தப்படுவதாக இரு்நத முன்னாள் அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர் மற்றும் சஜன் குமார் ஆகியோருக்கு சீட் கிடைக்காமல் போயிற்று என்பது நினைவிருக்கலாம்.
ஜர்னைல் சிங்கின் இல்லம் புது டெல்லி தொகுதிக்குட்பட்ட லஜ்பத் நகரில் உள்ளது. இன்று டெல்லியில் வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் ஜர்னைல் சிங் வாக்களிக்கவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யாருக்கும் ஓட்டளிக்க மாட்டேன். எனது ஓட்டைப் பெறும் தகுதி எந்தக் கட்சிக்கும் கிடையாது. அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்க தேர்தல் ஆணையம் புதிய விதிமுறையைக் கொண்டு வர வேண்டும்.
என்னை எந்தக் கட்சியும் கவரவில்லை. மதத்திற்காகவும், ஜாதிக்ககாவும், பிராந்தியத்திற்காகவும்தான் அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்கின்றன. யாருமே அரசியல் சட்டத்தின் ஷரத்துகளை மதிப்பதில்லை, அதை பின்பற்றுவதில்லை. எனவே யாருக்கும் நான் ஓட்டளிக்க விரும்பவில்லை என்றார்.
காங்கிரஸை எதிர்த்து வாக்களிக்கலாமே என்று கேட்டபோது, நான் எந்தக் கட்சியையும் எதிர்க்கவில்லை. நீதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே ஏப்ரல் 7ம் தேதி நான் அப்படி நடந்து கொண்டேன்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் போலித்தனமாகவே செயல்படுகின்றன. தங்களுக்கு வசதியாக மதச்சார்பின்மையை மாற்றிக் கொண்டு விட்டன என்றார் ஜர்னைல்.