கேபிள் டிவி சங்கத் தலைவர் கொலை-தென்காசியில் பதட்டம்
தென்காசியில் கேபிள் டிவி ஆபரேட்டர் சங்க தலைவராக இருந்தவர் முகமது மைதீன்(56). இவர் தென்காசி அம்மன் சன்னதி அருகே கேபிள் டிவி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்துக்குள் இன்டர்நெட் பிரவுசிங் மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் 12.40 மணிக்கு இரண்டு பேர் பிரவுசிங் செய்ய வந்துள்ளனர். அப்போது அவர்கள் யாருக்கும் தெரியாமல் அரிவாளை ஒழித்து வைத்து கொண்டுவந்துள்ளனர்.
சுமார் 30 நிமிடம் வரை பிரவுசிங் செய்த அவர்கள் பின்னர் பணத்தை கொடுத்துள்ளனர். அதை வாங்கி பத்திரமாக வைக்க முயன்ற சமயத்தில், மைதீன் எதிர்பாராத நிலையில் அரிவாளை எடுத்து அவரை சராமரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த மைதீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது தந்தை அப்பகுதி ஐக்கிய ஜமாத் தலைவராக இருக்கிறார். இதையடுத்து தென்காசி பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டன.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். கொலைக்கு குடும்ப பிரச்சினை அல்லது தொழில் போட்டி காரணமாக இருக்குமா என விசாரித்து வருகின்றனர்.