காங்கிரஸ் கொடி இறக்கம்- கருப்புக் கொடி ஏற்றம்!
சென்னை: சென்னை அருகே திருவொற்றியூரில், காங்கிரஸ் கொடியை இறக்கி விட்டு சில விஷமிகள் கருப்புக் கொடியை ஏற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியில் காங்கிரஸ் கொடிக் கம்பம் உள்ளது. அங்கு நேற்று காலை காங்கிரஸ் கொடிக்குப் பதில் கருப்புக் கொடி பறந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து காங்கிரஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து காங்கிரஸார் திரண்டு வந்து கருப்புக் கொடியை கீழிறக்கி காங்கிரஸ் கொடியை ஏற்றினர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தமிழகத்துக்கு வரவிருந்த நிலையில் கருப்புக் கொடி ஏற்றியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நகர காங்கிரஸ் தலைவர் சுகுமார் தலைமையில் திருவொற்றியூர் தேரடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கம்பத்தில் கருப்புக் கொடி ஏற்றியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.