நாளை சிவகங்கை-திருச்சியில் ராகுல் பிரசாரம்
சிவகங்கை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி சிவகங்கையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாகவும், திருச்சியில் முன்னாள் மேயர் சாருபாலாவுக்கு ஆதரவாகவும் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மே 13 -ம் தேதி நடைபெறுக்கின்றது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் தலைவர்களின் பிரச்சாரம் அனல் பறக்கின்றது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய நாளை தமிழகம் வருகின்றார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி வரும் ராகுல்காந்தி, ஹெலிகாப்டரில் புறப்பட்டு சிவகங்கை செல்கிறார்.
அங்கு மதியம் 2 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்பு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி வரும் அவர் மாலை 4 மணிக்கு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ராகுல் பிரசாரத்திற்கு வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி சுதீப் லகாத்கயா, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நேற்று திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.