தமிழர்களின் போராட்ட கொந்தளிப்பால் சோனியா வருகை ரத்து - நெடுமாறன்
சென்னை: தமிழர்களின் போராட்ட உணர்வினால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வருகை ரத்தாகியுள்ளதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சோனியா காந்தியின் தமிழக வருகை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது தமிழக மக்களின் போராட்ட உணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
ஈழத் தமிழர் பிரச்னையில் சோனியா காந்தியும் மத்திய காங்கிரஸ் அரசும் செய்து கொண்டிருக்கும் துரோகத்திற்கும் அதற்குத் துணை போகும் தமிழக தி.மு.க அரசுக்கும் எதிராக தமிழக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையை உணர்ந்து சோனியா காந்தி தனது பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
சோனியாவுக்கு எதிராகக் கறுப்புக் கொடிப் போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னைக்குத் திரண்டு வந்த அனைத்து தோழர்களுக்கும் இப்போராட்டத்தில் பங்கேற்க முன்வந்த திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத் தலைவர் இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கும் திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது நன்றி.
மீண்டும் சோனியா காந்தி தமிழகம் வருவதாக இருந்தால் அவருக்கு எதிரானப் போராட்டம் உறுதியாக நடத்தப்படும். இப்போது இப்போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது.
இப்போராட்டத்தில் ஈடுபட இருந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட ஏராளமானத் தோழர்களை உடனே விடுதலை செய்யும்படி வற்புறுத்துகிறேன் என நெடுமாறன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications