உதவி சப் இன்ஸ்பெக்டர் ஓம்ப்ளேவை ஏகே47 துப்பாக்கியால் சுட்டான் கசாப் - எஸ்.ஐ. சாட்சியம்
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் சாட்சிகளின் விசாரணை இன்று தொடங்கியது. தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கசாப், உதவி சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்ப்ளேவை, ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கடம் இன்று சாட்சியம் அளித்தார்.
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் வழக்கில் இன்று சாட்சிகளின் விசாரணை தொடங்கியது.
அப்போது சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கடம் முதல் நபராக சாட்சியம் அளித்தார்.
அவர் கூறுகையில், கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி கிர்கான் செளபாத்தி என்ற இடத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஓம்ப்ளேவை, கசாப் ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
ஸ்கோடா காரில் தப்பிச் சென்ற தீவிரவாதிகளை பிடிக்க முயற்சித்த காவல் அதிகாரிகளில் நானும் ஒருவன். நான் காரில் இருந்த தீவிரவாதி அபு இஸ்மாயிலை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன். அந்தக் காரில் கசாப்பும் இருந்தான்.
துப்பாக்கிச் சூட்டில் இஸ்மாயில் காயமடைந்தான். கசாப் முன் பக்க கதவைத் திறந்து இடது பக்கமாக வெளியே வந்தான். பின்னர் கீழே விழுந்தான்.
இதையடுத்து கசாப்பை நோக்கி ஓம்ப்ளே மற்றும் இன்னொரு காவல்துறை அதிகாரியான சஞ்சய் கோவில்கர் ஆகியோர் சென்றனர். அப்போது கசாப், திடீரென ஓம்ப்ளேவை நோக்கி சரமாரியாக சுட்டான்.
இதில் ஓம்ப்ளே படுகாயமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து மற்ற போலீஸார் கசாப்பை லத்திகளால் சரமாரியாக தாக்கி அவனை நிலை குலையச் செய்தனர். அவனிடமிருந்த ஏ.கே. 47 துப்பாக்கியையும் பறித்து விட்டனர்.
காயமடைந்த ஓம்ப்ளே மற்றும் கோவில்கர் ஆகிய இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இஸ்மாயில், கசாப்பையும் இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் என்று வாக்குமூலம் அளித்தார் கடம்.












Click it and Unblock the Notifications