ஜெ. ஹெலிகாப்டரால் மீண்டும் சிக்கல் - காரில் பயணம்
கடலூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அவர் காரில் சென்னைக்குப் பயணமானார்.
2 நாட்களுக்கு முன்பு பிரசாரத்தை முடித்து விட்டு ஜெயலலிதா சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டரில் எரிபொருள் தீர்ந்து போனது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இறங்கி அங்கிரு்நது கார் மூலம் வீடு திரும்பினார் ஜெயலலிதா.
இந்த நிலையில் நேற்று கடலூருக்கு பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதா முடித்து விட்டு சென்னை திரும்பவிருந்த நிலையில் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் காரிலேயே சென்னை திரும்பினார்.
ஜெயலலிதா நேற்று புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு மதியம் 2 மணி அளவில் சிதம்பரத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு வந்தார்.
அவர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் உள்ள திசைகாட்டும் கருவி பழுதடைந்ததால், சிதம்பரத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் இறங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் சிதம்பரத்தில் தரை இறங்காமல் கடலூருக்கு வந்தனர். கடலூர் அண்ணா ஸ்டேடியத்தில் மதியம் 2-15 மணிக்கு ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டரின் திசைகாட்டும் கருவியில் ஏற்பட்டு இருந்த பழுது நீக்கப்பட்டது. அதுவரை ஜெயலலிதாவும், சசிகலாவும் காரில் அமர்ந்து இருந்தனர். 2-55 மணிக்கு அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் சிதம்பரத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
சிதம்பரத்தில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு மாலை 4-15 மணிக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கடலூருக்கு வந்தார். அங்கு மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மாலை 5 மணிக்கு கார் மூலம் அண்ணா ஸ்டேடியத்துக்கு சென்று ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்தார்.
ஆனால் திசைகாட்டும் கருவி மறுபடியும் செயல் இழந்ததால் அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் அமர்ந்து இருந்தார்.
நீண்ட நேரமாகியும் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து ஹெலிகாப்டரை விட்டு வி்ட்டு மாலை ஐந்தரை மணியளவில் அவர் கார் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications