மதுரை திமுக பிரமுகர் வீட்டில் 1100 சேலை பறிமுதல்
மதுரை: மதுரையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு சேலை வழங்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுத்தனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் 1,100 சேலைகளை பறிமுதல் செய்தது.
மதுரையில் திமுக கூட்டணி சார்பில் மு.க.அழகிரியும், அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மோகனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் திமுகவினர் ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு டோக்கன் போட்டு பணம் கொடுப்பதாக புகார் வந்தது. பின்னர் தமிழக தேர்தல் அதிகாரிகள் தங்களது புகாரை கவனிக்கவில்லை என கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை தேர்தல் ஆணையாளர் நவீன் சாவ்லாவுக்கு புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு மாநகர போலீஸ் கமிஷனர் நந்தபாலனை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது. இந்த புகார் பிரச்சினை முடிவதற்குள் திமுகவினர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாக்காளர்களுக்கு சேலை கொடுப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர்.
ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பாள் நகர் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரின் வீடு மற்றும் டியூசன் சென்டரில் வைத்து கொடுக்கப்படுவதாகவும் கூறினர்.
இதையடுத்து தேர்தல் பார்வையாளர் மாத்யூசாலி, தேர்தல் அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக சேலைகள் அடிக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 பண்டலுக்கு 100 சேலை வீதம் 11 பண்டலில் மொத்தம் 1,100 சேலை இருந்தது. ஆனால், திமுகவினர் அது அழகிரி பிறந்த நாளுக்கு வாங்கி வைத்திருந்த சேலை என கூறினர்.
அதற்கு தேர்தல் அதிகாரிகள், பிறந்த நாள் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இதனால் உங்கள் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த சேலைகளையும் பறிமுதல் செய்தனர். கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் பெற்று வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.