For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல்துறையின் காட்டு தர்பாரை நிறுத்துங்கள்: கொளத்தூர் மணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பெரியார் திராவிட கழகத்தினர் மீது காவல்துறையின் பொய் வழக்கு போட்டு அராஜகம் செய்து வருகிறது. இவர்களின் காட்டு தர்பாரை நிறுத்த வேண்டும் என அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி தமிழக முதல்வரிடம் கேட்டு கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணை போகும் காங்கிரசை தோற்கடிக்கும் முழுக்கத்தை முன் வைத்து பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பரப்புரையை முடக்குவதற்குத் தமிழகக் காவல்துறை கையாண்டு வரும் அடக்குமுறை எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் பறிமுதல், குறுந்தகடுகள் வைத்திருந்த தோழர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது, பிரசார வாகனம் பறிமுதல், பரப்புரை மேற்கொண்ட பெரியார் தி.க.தோழர்கள் கைது என தொடரும் நடவடிக்கைகளோடு, தற்போது சென்னையில் வன்முறை கும்பல் துணையோடு ராயப்பேட்டையில் பெரியார் படிப்பகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மே 2ம் தேதி திமுக பகுதிச்செயலாளர் ரவி தலைமையில் காவல்துறை துணையோடு வந்த வன்முறை கும்பல் பெரியார் சிலையை தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் நூலகத்தில் இருந்த கம்யூட்டரை திருடி சென்றுள்ளது.

இவற்றின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, எந்தக் குற்றமும் செய்யாத பெரியார் தி.க. தோழர்கள் மீது திமுக தேர்தல் அலுவலகத்தைத் தாக்கியதாக பொய் வழக்குப் புனைந்து சிறையில் அடைத்துள்ளது.

அடக்குமுறையின் உச்சகட்டமாக பெரியார் சிலையை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்திய தமிழ்ச் செல்வி, சுதா என்ற இரு பெண்கள் காவல்துறையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மத்திய சென்னை இன்னொரு மதுரை...

மத்திய சென்னை தொகுதி மற்றொரு மதுரையாகி அறிவிக்கப்படாத அடக்குமுறையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சிலைகளைச் சேதப்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எச்சரித்து வரும் தமிழக காவல்துறை, ராயப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்திய திமுக ஏவிய வன்முறை கும்பலைக் கைது செய்யாதது ஏன் என்று கேட்க விழைகிறேன்.

காங்கிரஸ் தலைவர் சோனியா வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கூறி மே 5ம் தேதி கைது செய்யப்பட்ட கழக பொது செயலாளர் விடுதலை ராஜேந்திரன் வன்முறையில் ஈடுபட்டதாக பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போல் உடல் ஊனமுற்ற தோழர் சேத்துப்பட்டு ராஜனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவையில் ராணுவ வாகனங்களை தாக்கியதாக அந்த நிகழ்வுக்கு தொடர்பில்லாதவர்களும், அப்போது ஊரில் இல்லாதவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். பல ஊர்களில் காவல்துறை சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தி வருகிறது.

அடக்குமுறையை பயன்படுத்தி பெரியார் தி.க.வை முடக்கும் முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறப்போவதில்லை. பெரியார் லட்சியங்களுக்காக போராடும் இந்த இயக்கத்தை முடக்கும் ஆட்சி, பெரியார், அண்ணா வழி வந்த ஆட்சியாக இருக்காது.

பெரியார் சிலையை சேதப்படுத்திய, ராய்பேட்டை அலுவலகத்தில் கம்ப்யூட்டரை திருடிய சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த வன்முறை வெறியாட்டத்துக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு, அராஜகத்துக்கு துணை நின்று அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும். இல்லையேல் இந்த காட்டு தர்பாருக்கு பதில் சொல்லும் காலம் வந்தே தீரும் என எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார் கொளத்தூர் மணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X