உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்தவர்தான் ஜெயலலிதா - ஆர்.எம்.வீ.
சென்னை: எனக்கு எல்லாமே எம்.ஜி.ஆர். தான் என்று ஒப்பாரி வைத்த ஜெயலலிதாதான், அவர் உயிருடன் இருந்தபோதே அன்றைய பிரதமர் அமரர் ராஜீவ்காந்திக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்க லாயக்கற்றவர் என்று கடிதம் எழுதி உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்தவர் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பன்.
இதுதொடர்பாக ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
5 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சியும், அதைத்தொடர்ந்து 5-வது முறை முதல்-அமைச்சராக, 3 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் உள்ள கருணாநிதியின் ஆட்சியில் தமிழகம் இதுவரை கண்டிராத வளர்ச்சியை பல துறைகளிலும் அடைந்து கொண்டு வருகிறது.
இவை எல்லாம், பழைய ஆட்சியில் ஆணவமும், அலட்சியமும் நிறைந்த கொடுமை மிக்க ஆட்சியில் நடைபெறவில்லை. அதனால்தான் அவர்கள் ஆட்சியில் இருந்தபோதே தமிழ் மக்கள் புத்தி கற்பித்து 40 இடங்களில் வெற்றி தேடி தந்தார்கள். பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்தும் ஜெயலலிதாவை விரட்டி அடித்தார்கள்.
படிப்பினை ஏற்படவில்லையே...
அப்படி விரட்டப்பட்ட மக்கள் விரோத சக்தியான ஜெயலலிதாவிற்கு படிப்பினை ஏற்படவில்லை. தேர்தலில் எத்தனை இடம் கிடைக்கும் என்று அலைந்து அரசியல் நடத்தும், இடம் தேடிகள் கிடைத்திருக்கிறார்கள் என்ற துணிச்சலில், 70 ஆண்டுகளாக, 14 வயதில் இருந்து இரவு பகலாக உழைப்பு, உழைப்பு என்று ஓய்வறியாமல் தமிழ் இனத்திற்காக பாடுபட்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் வழியில் தமிழ் இனத்தை இன்றும், என்றும் வாழவைக்கும் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, மக்களுக்கு பயந்து கொண்டு மருத்துவமனையில் படுத்து கொண்டிருக்கிறார் என்று வாய்க்கொழுப்போடு பேசிக் கொண்டிருக்கிறார்.
13ம் தேதி பாடம் புகட்டுவார்கள்...
கோடிக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள நல்லவர்கள், பெரியவர்கள், நடுநிலையாளர்கள், அறிஞர்கள் என்று எல்லோரும் இந்த பெண்மணிக்கு பாடம் புகட்ட 13-ந் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் பெருமையும், புகழுமிக்க எந்த தலைவரையும் இந்த ஆணவம் பிடித்த பெண்மணி விட்டு வைத்ததில்லை.
எல்லாமே எனக்கு எம்.ஜி.ஆர். தான் என்று ஒப்பாரி வைத்த இவர்தான், அவர் உயிருடன் இருந்தபோதே அன்றைய பிரதமர் அமரர் ராஜீவ்காந்திக்கு "எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருக்க லாயக்கற்றவர்'' என்று கடிதம் எழுதி உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்தவர்.
அதுமாத்திரமின்றி, அண்ணா உருவாக்கிய கட்சியை 60 ஆண்டுகளும், அரசை 40 ஆண்டுகளும் காப்பாற்றி வளர்த்துக் காத்துவரும் கருணாநிதியின் 70 ஆண்டு உழைப்பும், இன்றும் உழைக்கும் திறமும் இல்லையானால், இந்த பெண்மணி, இப்படி மனித பண்பாடுகளை இழந்து பேசுகிற இடத்திற்கும் வந்திருக்க முடியாது என்பதையும், இந்த ஆணவத்திற்கும் அடக்க மற்ற தன்மைக்கும் வருகிற 13-ந் தேதி தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்ட இருக்கிறார்கள் என்பதை எம்.ஜி.ஆர். பெயரால் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்.எம்.வீ.