For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. என்ற சாத்தான் வேதம் ஓதுகிறது...ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்: கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னர் அரசு ஊழியர்கள் என்னை பழிவாங்கி விட்டார்கள் என்று சட்டமன்றத்தில் பயங்கர குற்றச்சாட்டு கூறிய ஜெயலலிதா தான் இன்று அரசு ஊழியர்களுக்காக பரிந்து பேசி அவர்களை ஏமாற்ற முயல்கிறார் என்று அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

கடலூரி்ல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசுகையில்,

நேற்று இதே கடலூருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து சென்றுள்ளார். சிதம்பரத்தில் கூட்டம் இல்லை என்று கடலூர் வந்தாராம். கடலூரில் கூட்டம் இல்லை என்று சிதம்பரம் சென்றாராம். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.

ஆனால் தலைவர் கலைஞரை எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் அதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது.

2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த அதிமுக ஆட்சியில் ஒரு மதம் பிடித்த யானையின் கையில் சிக்கி தவித்த குழந்தையை போல் தமிழ்நாடு இருந்தது. அந்த குழந்தையைக் காப்பாற்றி ஏழை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, நடுத்தர மக்களுக்கு பல திட்டங்களைத் தந்தவர் முதல்வர் கருணாநிதி.

அதே போல அரசு ஊழியர்களுக்கு அவர்கள் (ஜெயலலிதா) ஆட்சியில்தான் சலுகைகள் செய்து கொடுத்தார்களாம், திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். அது மட்டுமல்ல மத்திய அரசின் சம்பள கமிஷனை அமல்படுத்தவில்லை என்ற இன்னொரு பொய்யையும் சொல்லிச் சென்றுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னர் அரசு ஊழியர்கள் என்னை பழிவாங்கி விட்டார்கள் என்று சட்டமன்றத்தில் பயங்கர குற்றச்சாட்டு கூறியவர் தான் இந்த ஜெயலலிதா. இன்று அரசு ஊழியர்களுக்காக பரிந்து பேசி அவர்களை ஏமாற்ற முயல்கிறார்.

ஜெயலலிதாவிடம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பட்ட பாட்டு கொஞ்சமா நஞ்சமா?.

அவரது ஆட்சியில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களால் ஒரு போராட்டமாவது நடத்த முடிந்ததா? எஸ்மா, டெஸ்மா என்று சட்டத்தை பாய்ச்சி கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர் தானே இந்த ஜெயலலிதா. அதை யாராவது மறப்பார்களா?.

அன்று 64 பேர் செத்து மடிந்தார்களே. 6,000 அரசு ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தார்களே.. பெண்களிடம் கூட மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார்களே...

அந்த ஜெயலலிதா தான் இன்று ஓட்டுக்காக அரசு ஊழியர்களுக்கு வாக்காலத்து வாங்குவது போல் பேசுகிறார். இதற்கு அவருக்கு ஏதாவது யோக்கியதை இருக்கிறதா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஊரை ஏமாற்றி, உலையில் போட்டு, சாத்தான் வேதம் ஓதுவது போல் இங்கே வந்து ஊதிவிட்டு போய் இருக்கிறார்

கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் வேலை கொடுத்துள்ளோம். 10,000 சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து நடுத் தெருவில் நிற்க வைத்தார் ஜெயலலிதா. அதே போல 13,000 மக்கள் நலப்பணியாளர்களும் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 72 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் கலைஞர் ஆட்சிக்கு வந்த மறுநாளே அவர்கள் அனைவரையும் பணியில் அமர்த்தினோம்.

ஜெயலலிதா ஆட்சியில் 2 லட்சம் பேரை வேலையில் இருந்து நீக்கியபோது அவர்களது கட்சியை சேர்ந்த 11,000 பேரை தற்காலிக ஊழியர்களாக நியமித்தனர். அவர்களை திமுக ஆட்சி நிரந்தரம் செய்யவில்லை என்று ஒரு பொய்யை கூறியிருக்கிறார். அவர்கள் ஆட்சியில்தான் நிரந்தரம் செய்யாமல் வைத்திருந்தார்கள். ஆனால் நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் தற்காலிக ஊழியர்கள் பாதிபேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X