கருணாநிதி-ஜெவுக்கு லை டிடெக்டர் சோதனை: விஜய்காந்த்!
விழுப்புரம்: முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் பல ஊழல்கள் அம்பலமாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் கணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:
அரசியல்வாதிகளும், உங்களிடம் ஓட்டு வாங்கி அமைச்சர்களாகி அவர்கள் வாழ்க்கையில் தான் வறுமை ஒழிந்துள்ளது. நாம் இன்னும் புதை குழியில் தான் உள்ளோம். வறுமையை ஒழிக்க உருப்படியான திட்டங்கள் இல்லை. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தொழிற்சாலை எதுவும் இல்லை.
கல்வியில் பின் தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலும் இல்லை, சாலையும் இல்லை. ஆனால் முதல்வர் கருணாநிதி, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார். இந்த ஒப்பந்தங்கள் போடுவதும், திட்டங்கள் தீட்டுவது எல்லாம் கொள்ளை அடிப்பதற்கே தவிர. வறுமையை ஒழிக்க அல்ல.
திமுக, அதிமுக மாறி, மாறி கொள்ளை அடித்து நாட்டை குட்டி சுவராக்கிவிட்டனர்.
உதவி வேளாண் அலுவலர் பணிக்கு ஒவ்வொருவரிடமும் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு 1,700 பேரை நியமித்துள்ளனர். கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் பல ஊழல்கள் அம்பலமாகும் என்றார்.
அண்ணன், தம்பியைப் பிரித்த ஜெயலலிதா:
கடலூர் தொகுதியில் தேமுதிக சார்பில் எம்.சி. தாமோதரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் தாமோதரனின் தம்பி சம்பத் நிற்கிறார்.
தாமோதரனுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
கடலூரில் நமது வேட்பாளர் அண்ணன் தாமோதரனுக்கு எதிராக அதிமுகவில் அவரது தம்பியை நிறுத்தி இருக்கிறார்கள்.
அண்ணா காலத்தில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுப்பிரமணியன் என்பவரை காமராஜர் நிறுத்தினார். அதன்பிறகு சுப்பிரமணியனின் தம்பி திமுகவில் சீட் கேட்ட போது அறிஞர் அண்ணா கொடுக்க மறுத்து விட்டார்.
ஒரு குடும்பத்தில் அண்ணன்-தம்பி இரண்டு பேரும் நிற்கக் கூடாதுப்பா! உங்கள் குடும்பத்தில் பிரிவினை வரக்கூடாது. ஆகையினால் நான் உன்னை நிறுத்த மாட்டேன் என்று அண்ணா பெருந்தன்மையுடன் சொல்லி விட்டார்.
ஆனால் அண்ணாவின் பெயரை தாங்கி இருக்கிற அதிமுகவில் பாருங்கள், அண்ணனுக்கு எதிராக தம்பியை நிறுத்தி குடும்பத்தில் சண்டையை மூட்டி விடுகிறார்கள், இப்படியெல்லாம் செயல்படுபவர்களுக்கு வாக்களிக்கலாமா? நல்ல தீர்ப்பை நீங்கள் தான் வழங்க வேண்டும்.
எனக்கு ஒரு தவளைக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. பாலைவனத்தில் ஒரு தவளை போய் கொண்டு இருந்ததாம், நல்ல சூடு! கீழேயும், மேலேயும் எங்கேடா போகிறது? என்று தவளை தவித்துக்கொண்டு இருந்ததாம், அப்போது தவளை ஒரு நிழலை பார்த்ததாம், உடனே அந்த நிழலில் போய் இருந்ததாம். நிழலுக்குள் ஒதுங்கின பிறகு தான் தெரிந்ததாம், அது படம் எடுத்துக்கொண்டு இருக்கிற கருநாகத்தின் நிழல் என்று.
கொஞ்சம் யோசிச்சு போங்க..
ஆகவே மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிற நீங்கள், இந்த தவளை மாதிரி போகாமல் கொஞ்சம் யோசிச்சு போங்க என்று சொல்கிறேன் மக்களே! அதாவது கொதிக்கிற எண்ணையில் இருந்து எரிகிற அடுப்புக்குள் விழுந்து விடாதீர்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். எது மாற்றத்தை கொடுக்கும்? மாற்றத்தை கொடுக்கிற கட்சி எது? என்பதை நீங்கள் சிந்தித்து பாருங்கள்.
குண்டூசி முதல் ஹெலிகாப்டர் வரை...
தேமுதிக வெற்றி பெற்றால் 40 இடங்களில் வர்த்தகமையம் அமைத்துக்கொடுப்பேன். வர்த்தக மையம் அமைத்துக் கொடுத்தால் குண்டூசியில் இருந்து ஹெலிகாப்டர் வரைக்கும் அங்கே கிடைக்கும்.
அப்படி 40 இடங்களிலும் வர்த்தக மையம் அமைக்கும் போது நீங்கள் சீனாவைப்பாரு என்று சொல்ல வேண்டாம், தமிழ்நாட்டை பார் என்று சொல்லலாம்!
தமிழ்நாடு பேங்க்...
இதேபோல் தமிழ்நாடு பேங்க் வைத்து ஒவ்வொருவருக்கும் தொழில் செய்ய 10 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பேன். கடன் கொடுத்து உங்களை தொழில் செய்ய வைப்பேன். அதுதான் என்னுடைய திட்டம்.
அதே போல் எல்லா கிராமப்புற பகுதிகளிலும் நடமாடும் கால்நடை மருத்துவமனை அமைத்துக் கொடுப்பேன். ஒவ்வொரு நகராட்சிக்கும், ஊராட்சிக்கும் இலவச கம்ப்iட்டர் பயிற்சி மையம் வைத்துக்கொடுப்பேன், இலவசமாக இளைஞர்கள், மாணவ-மாணவிகள் படிக்க வேண்டும்.
கூரை இல்லாத கல்வீடுகள் கட்டித்தரப்படும், பெண்கள் படிப்பில் முன்னேறுவதற்காக 40 தொகுதிகளிலும் கலை-அறிவியல் கல்லூரிகளை தொடங்குவேன்.
நாசமா போன்னுதான் கொடுப்பான்...
இந்த தேர்தலில் உங்களிடம் காசு கொடுத்து ஏமாற்றிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்த காசை வாங்காதீர்கள், அது பாவப்பட்ட காசு! லஞ்சம் கொடுக்கிறவங்க பாராட்டியா கொடுப்பார்கள், நீ நாசமா போ என்று தான் கொடுப்பான்.
எனவே அப்படி கொடுக்கிற காசை நாம் வாங்கினால் நம்ம குடும்பம் நல்லாயிருக்காது, ஆகவே அவங்க கொடுக்கிற காசை வாங்காதீங்க. உங்களுக்கு தெரியாமல் வீட்டுக்குள்ளே போட்டாலும், தயவு செய்து அதை எடுத்து தலையை சுற்றி வீட்டுக்கு வெளியே போட்டு விடுங்கள் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications