பாரதிராஜா பிரசாரத்தில் காங்கிரஸார் மீது செருப்பு வீச்சு -இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
சிவகங்கை: சிவகங்கையில் இயக்குனர் பாரதிராஜா பங்கேற்ற பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷம் போட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள், காங்கிரசார் மீது செருப்பு வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்றொரு கூட்டத்தில் அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது.
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் திரையுலக தமிழீழ ஆதரவு அமைப்பு அமைக்கப்பட்டு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலப்ட்டு வருகின்றனர். இந்த அமைப்பினர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளிலும் அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.
நேற்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் அவரை எதிர்த்து பிரசாரம் செய்தனர்.
சிவகங்கை சிவன் கோவிலுக்கு அருகே இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செல்வமணி முதலில் பேசினார். அதை தொடர்ந்து பாரதிராஜா பேச வந்தார். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் பாரதிராஜா பேசக்கூடாது என கோஷமிட்டனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக கூட்டத்தில் இருந்தவர்களும் கோஷம் போட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் காங்கிரசாரை நோக்கி செருப்பை வீசினர். பின்னர் அங்கு நடந்த லேசான மோதலில் இயக்குனர் ஒருவரின் கார் டிரைவருக்கு கையில் அடிபட்டது.
இதேபோல, சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மற்றும் புதுவயல் பகுதிகளில் இயக்குனர் சுந்தரராஜன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் பிரசாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த அமைப்பினர் அங்கு பிரசாரத்தை உடனடியாக முடித்து கொண்டு கணடனூரில் பிரசாரம் செய்ய சென்றனர். அங்கும் வந்த திமுக கூட்டணியினர் அவர்கள் பிரசாரம் செய்ய கூடாது என கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதை கண்ட போலீசார் இயக்குனர்களின் பிரசாரத்துக்கு தடை விதித்து, அவர்களை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து காரைக்குடிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கே அதிமுக, திமுக தொண்டர்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் சாக்கோட்டை அருகே சென்றவுடன் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது மோதலாக மாறியது. தகவல் கிடைத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த சாக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் அவர்களை சமாதானப்படுத்தினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சப்-இன்ஸ்பெக்டரை கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடு, அவருக்கு அடிபட்ட இடத்தில் தையல் போடப்பட்டது.












Click it and Unblock the Notifications