ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வந்தார். மாலை 4 மணிக்கு சோனியா காந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
விமான நிலையத்தில், திமுக, காங்கிரஸ் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அருகே உள்ள கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் அடையார் ஹெலிபேட் தளத்திற்கு பின்னர் அவர் கிளம்பிச் சென்றார்.
தீவுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரப் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்றார், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் கருணாநிதியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தீவுத் திடல் பொதுக் கூட்டத்தில், குலாம் நபி ஆசாத், முதல்வர் கருணாநிதி, தங்கபாலு, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் திருமாவளவன் பேசினார். பின்னர் தங்கபாலு பேசினார். இதையடுத்து சோனியா காந்தி பேசினார்.
சோனியா காந்தியின் பேச்சு..
இந்திரா காந்தி காலம் முதலே தமிழகமும், தமிழக மக்களும் எங்கள் குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் அன்பும், மதி்ப்பும் வைத்திருக்கிறீர்கள்.
இலங்கையில் இன்று அப்பாவித் தமிழர்கள் படும் வேதனையும், துயரமும் கண்டு நான் மிகுந்த வேதனையை அடைந்துள்ளேன்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பேரவதிக்குள்ளாகியுள்ளனர். இது எனக்கு வேதனையைத் தருகிறது. நான் கவலை அடைந்துள்ளேன்.
இலங்கையில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படுவது குறித்து இந்தியா உறுதிபட செயல்பட்டு வருவதாக ஏற்கனவே பிரதமர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்நாட்டு சட்டத்திற்குட்பட்டு, சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ, அமைதியுடன் வாழ, கெளரவத்துடன் வாழ ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.
கடந்த தேர்தலில் தமிழக மக்கள் எங்களுக்கு 40க்கு 40 தொகுதிகளைக் கொடுத்தீர்கள். இந்த முறையும் அதேபோல 40 தொகுதிகளிலும் வெற்றியைக் கொடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருந்தீர்கள். அதேபோல நாங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். தமிழக மக்களை ஐக்கிய முற்போக்கு அரசுகைவிடாது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் தந்தது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி நிதியைத் தந்ததும் எங்களது அரசுதான். சேது சதமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வ்ததும் எங்களது அரசுதான்.
தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், கார் தொழிற்சாலை என பல துறைகளில் பெருமளவிலான முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வந்ததும் எங்களது அரசுதான் என்றார் சோனியா காந்தி.
சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications