3வது அணி வந்தால் 3 மாதத்தில் தேர்தல்-கனிமொழி
நாகர்கோவில்: மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்று மாதத்தில் மீண்டும் தேர்தல் வரும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனை ஆதரித்து கனிமொழி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு தனி இடத்தை திமுக அரசு உருவாக்கி தந்துள்ளது. முதல்வர் கருணாநிதி 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை மக்களுக்கு கொண்டு வந்துள்ளார். ரூ. 7 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார்.
வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களுக்காக இந்த அரசு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசலை 1000 லிட்டரிலிருந்து 1500 லிட்டராக உயர்த்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்த ஜெயலலிதா, சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்தார். பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற்று தந்தவர் கருணாநிதி.
மூன்றாவது அணியில் 15 பேர் பிரதமர் பதவிக்கு உள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மீண்டும் தேர்தல் வரும்.
அப்படி தேர்தல் வந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். தொழில்வளம் குன்றிவிடும். தீவிரவாதம் வளரும்.
எனவே மத்தியில் நிலையான ஆட்சியை கொடுக்க ஜனநாயக முற்போக்கு கூட்டணியால் மட்டுமே முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications