தூத்துக்குடியில் திமுக-அதிமுக மோதல்-15 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக, அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் மோதி கொண்டனர். இதையடுத்து போலீசார் இரு கட்சியையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தூத்துக்குடியில் திமுக சார்பில் ஜெயதுரையும், அதிமுக கூட்டணி சார்பில் சிந்தியா பாண்டியனும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியில் அந்தந்த கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் பிரச்சாரத்தின் போது தூத்துக்குடி 12வார்டு திமுக கவுன்சிலர் சுரேஷ் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான ஜான்சனுக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து திரேஸ்புரம் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதி்முக பேச்சாளர் கருணாநிதியை சிலர் தாக்கினர். அவர் அளித்த புகாரின் பேரில் திமுக வட்ட நிர்வாகி அருணா உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மேட்டு பகுதியில் பிரச்சாரம் செய்த திமுகவினரை தாக்கியதாக அதிமுக பேச்சாளர் கருணாநிதி உள்பட 6 பேர் மீது திமுகவினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications