இந்திய தேர்தல்-இலங்கையில் பயங்கர தாக்குதலுக்கு திட்டம்
சென்னை: இந்தியாவில் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைவது வரையிலான அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி அந்த நேரத்தில்
தமிழர் பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த இலங்கை ராணுவம் முயலலாம் என்பதால் ஈழத் தமிழர்கள் பெரும் திகிலில் ஆழ்ந்துள்ளனர்.
இலங்கை ராணுவத்தின் இனப்படுகொலை, ஹிட்லர் காலத்து நாஜிப் படைகளின் நாசகார யூதப் படுகொலையையும் மிஞ்சிப் போய்க் கொண்டிருக்கிறது.
இதுவரை உலகத்தில் நடைபெற்ற மிக மோசமான படுகொலைச் சம்பவங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு ஈழத்தில் தமிழர்களை பிணக் குவியலாக்கிக் கொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு.
தினசரி நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்து வரும் இலங்கை அரசு தற்போது புதிய திட்டம் ஒன்றுடன் மிகப் பெரிய கொலை வெறித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தை அது மே 16ம் தேதிக்குப் பிறகு அரங்கேற்றலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தியாவில் தேர்தல் முடிந்தவுடன் இந்தத் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முக்கிய காரணம், தனக்கு 'கை' கொடுத்த கட்சி, தேர்தலில் தோல்வி அடைந்து விடாமல் காப்பாற்றும் எண்ணத்தில்தான் தற்போது சற்றே அடக்கி வாசித்து வருகிறது ராஜபக்சே அரசு.
இப்படி அடக்கி வாசித்தும் கூட 2000க்கும் மேற்பட்ட தமிழர்களை ஒரே நாள் இரவில் தீர்த்துக் கட்சிய அநாகரீக பெருமை ராஜபக்சே அரசுக்கு உண்டு.
நாளையுடன் இந்தியாவில் தேர்தல் முடிவுக்கு வருகிறது. 16ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அதன் பிறகு ஏகப்பட்ட அரசியல் அமளி துமளிகள், தாவல்கள், கெஞ்சல்கள், குலாவல்கள் என நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் டெல்லி பக்கம் திரும்பி விடும்.
உலக நாடுகளும் கூட இந்தியாவின் அடுத்த பிரதமர் யார், எந்த ஆட்சி வரப் போகிறது என்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் அடுத்த இந்திய ஆட்சியாளர் யார் என்பதை அறியவே ஆவலாக இருப்பார்கள்.
எனவே இந்த குழப்பமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்கள் மீதான தனது இறுதித் தாக்குதலை தொடுக்க இலங்கை அரசும், ராணுவமும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு போர் முனையில் நாசகார ஆயுதங்களை இலங்கை குவித்து வருவதாக செய்திகள் வெளியாகின. தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் இலங்கை அரசு பெருமளவில் குவித்து வருவதாகவும், ரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்படாமல் இருக்க தனது வீரர்களுக்கு முகமூடிகளை இலங்கை ராணுவம் வினியோகித்துள்ளதாகவும் செய்திகள் கூறின.
இவை எல்லாம் மே 16ம் தேதிக்குப் பின்னர் பெருமளவில் பயன்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தாக்கிக் கொண்டிருப்பதை விட ஒட்டுமொத்தமாக இறுதித் தாக்குதலை தொடுக்க இலங்கை அரசு முனையலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதற்கு இந்தியாவின் கவனம் முழுவதும் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதில் பதியப் போகும் மே 16ம் தேதியை இலங்கை அரசு தேர்வு செய்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்த சமயத்தில் என்ன மாதிரியான தாக்குதலை நடத்தினாலும் அது இந்தியாவிலிருந்து பெரிய அளவில் எதிர்ப்பைக் கொண்டு வராது என இலங்கை அரசு கணக்குப் போடுகிறது.
ஈழத் தமிழர்களும் கூட இந்தியத் தேர்தலுக்குப் பின்னர் தங்கள் மீதான தாக்குதலை இலங்கை ராணுவம் பெரிதுபடுத்தும் என்ற அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications