தேனியில் 37 பேருக்கு வாக்களிக்க தடை!
போடி: தமிழகத்தில் தேனி தொகுதியில் பல வாக்காளர்களுக்கு இரட்டை வாக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் கேரளாவில் வாக்களித்த 37 பேருக்கு தமிழகத்தில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
தமிழ்நாடு, கேரளா எல்லையில் போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகள். இப்பகுதியில் இருக்கும் ஏராளமான தமிழர்கள், கேரளாவை சேர்ந்த இடுக்கி மாவட்டத்தில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் கூலிகளாகவும், தோட்டத் தொழிலாளர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களில் பலர் கேரளா மற்றும் தமிழ்நாட்டு என இரண்டு இடங்களிலும் ரேஷன் கார்டு, ஓட்டுரிமை பெற்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரன், இடுக்கி மாவட்ட கலெக்டர் அசோக்குமார் சின்ஹாவிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அங்கு வேலை பார்த்து வரும் தமிழர்கள் பலர் இடுக்கி தொகுதியி்ல் வாக்களித்து விட்டு தற்போது தேனி தொகுதிக்கு உட்பட்ட போடி பகுதியில் வாக்களிக்கவும் உரிமை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படம் மூலம் அடையாளும் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் தேனி தொகுதியில் வாக்குரிமை கொண்டுள்ள 37 பேர் ஏற்கனவே கேரளாவில் வாக்களித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தமிழகத்தி்ல் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் தடை விதித்தனர்.