வாக்காளர்களுக்கு பணம்-திமுக எம்எல்ஏ சிறைபிடிப்பு
தேனி: தேனியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயற்சி செய்ததாக கூறி போடி எம்எல்ஏ லட்சுமணனை அதிமுகவினர் சிறை பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் எம்எல்ஏவை மீட்டனர்.
தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரது அலுவலகத்துக்கு போடி திமுக எம்எல்ஏ லட்சுமணன், காங்கிரஸ் நகரத் தலைவர் சின்ஸ் மற்றும் நிர்வாகிகள் சிலர் இரவு நேரத்தில் வந்தனர். அங்கு அவர்கள் வாக்காளர்களுக்கு தலா ரூ. 50 வழங்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவே அவர்கள் வந்துள்ளார்கள் என்ற தகவல் அதிமுகவினர் இடையே வேகமாக பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் குவிந்த அதிமுகவினர் எம்எல்ஏ லட்சுமணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்த அலுவலக அறையின் ஷட்டரை கீழே இறக்கி மூடி சிறைபிடித்தனர்.
இது குறித்து அதிமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தொலைபேசி மூலமாக மாவட்ட கலெக்டர் முத்துவீரன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தேன்மொழி ஆகியோருக்கு புகார் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு வந்த போலீசார் சிறைபிடிக்கப்பட்ட லட்சுமணன் எம்எல்ஏவை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அதிமுக நகரச் செயலர் முருகேசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் நகரச் செயலாளர் முருகேசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.