வாக்காளர்களுக்கு பிரியாணி-சிக்கியது கறி!
மதுரை: மதுரை அரசரடி பகுதியில் வாக்காளர்களுக்கு பிரியாணி தயார் செய்ய முயன்றவர்களைப் போலீஸார் வளைத்தனர். அவர்கள் வைத்திருந்த கறி பறிமுதல் செய்யப்பட்டது.
பிரியாணி தயார் செய்வதற்காக கறியுடன் வந்த மீரான் உசேன் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீஸார் வளைத்தனர். இதில் உசேன் தப்பி ஓடி விட்டார். கார்த்திக் மட்டும் பிடிபட்டார். அவரைக் கைது செய்த போலீஸார், காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
பூத் ஏஜென்ட் வெளியேற்றம்..
உசிலம்பட்டியில் பூத் ஏஜென்ட்டாக செயல்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர், அதிமுக எம்.எல்.ஏவின் புகாரின் பேரில் அதிகாரிகள் வெளியேற்றினர்.
உசிலம்பட்டியில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் காங்கிரஸ் சார்பில் பூத் ஏஜென்ட்டாக இருந்தார் மாயாண்டி. இவர் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்.
இன்று காலை இந்த சாவடிக்கு அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரன் ஓட்டுப் போட வந்தார். அவரிடம், மாயாண்டி ஐடி கார்டு இருக்கா என்று கேட்டுள்ளார். இதனால் கடுப்பான மகேந்திரன், அரசு ஊழியரான மாயாண்டியை எப்படி பூத் ஏஜென்ட்டாக அனுமதிக்கலாம் என ஆட்சேபனை எழுப்பி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கூறினார். இதையடுத்து மாயாண்டியை பூத்திலிருந்து அதிகாரிகள் வெளியேற்றினர்.
ரேஷன் கார்டுகளுக்கு அனுமதி இல்லை..
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 வகையான ஆவணங்களைக் கொண்டு வரலாம் என அறிவி்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் ரேஷன் கார்டு இடம் பெறவில்லை.
ஆனால் இது தெரியாமலோ அல்லது தெரிந்தோ பல வாக்காளர்கள் ரேஷன் கார்டுகளுடன் வருகின்றனர். அவர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே எழுமலையில் ஏராளமான பேர் ரேஷன் கார்டுகளுடன் வாக்களிக்க வந்தனர். ஆனால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
வாக்காளர்களுக்கு கம்ப்யூட்டர்: சுயேச்சை கைது
திருப்பூர் தொகுதி சுயேச்சை வேட்பாளரான கார்த்திகேயன் என்பவர், தான் போட்டியிடும் தொகுதி வாக்காளர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் தந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுபவர் கார்த்திகேயன். இவர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் வாக்காளர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்குவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்களான ராஜேந்திரன், செந்தில், சுப்ரமணி, தேவ ஆசிர்வாதம், நவீன் குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர் இவர்கள் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications