திண்டுக்கல்-வாக்குசாவடி அருகே திமுக பிரமுகர் கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதி சின்னாளபட்டி அருகே ஓட்டு போட வந்த ஒருவர் உறவினரால் குத்தி கொலை செய்யப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே பூத்தம்பட்டியில் வசித்து வந்தவர் தங்கவேல் (48). அப்பகுதி திமுக கிளைச் செயலராக இருந்த அவர் வெள்ளோடு அருகே இருக்கும் பாப்பனம்பட்டியில் ஓட்டு போடுவதற்காக இன்று காலை சென்று கொண்டிருந்தார்.
வாக்குசாவடிக்கு அருகில் வந்த போது அதே ஊரை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்துக்கண்ணன் என்பவர் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்துக்கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கவேலை குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தங்கவேலு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிர் பாதி வழியிலே பிரிந்தது.
அம்பாத்துறை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வாக்குசாவடி அருகே நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications