3வது அணி கூட்டம் - கெளடா வர மாட்டார் - திருப்பதி போகிறாராம்!
டெல்லி: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் மே 18ம் தேதி கூட்டப்பட்டுள்ள 3வது அணித் தலைவர்கள் கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவே கெளடா கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அன்றைய தினம் திருப்பதிக்குப் போவதால் வர மாட்டாராம்.
3வது அணியிலிருந்து சில கட்சிகள் காங்கிரஸ் அல்லது பாஜக அணிக்குத் தாவக் கூடிய அபாயங்கள் அதிகரித்து வருகின்றன.
அதை உறுதி செய்வது போல தேவெ கெளடாவின் மகன் குமாரசாமி சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இதனால் கெளடா தொடர்ந்து 3வது அணியில் இருப்பாரா அல்லது காங்கிரஸுக்கு ஆதரவு தருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மே 18ம் தேதி டெல்லியில் கூட்டப்பட்டுள்ள 3வது அணித் தலைவர்கள் கூட்டத்தில் கெளடா பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் திருப்பதி போவதால் வர இயலாத நிலை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் 17ம் தேதியன்று கெளடா, இடதுசாரி தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஷ கட்சி ஆகியவற்றின் தலைவர்களை கெளடா சந்திக்கவுள்ளதாக அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் அலி தெரிவித்தார்.
மே 18ம் தேதி கெளடாவுக்குப் பிறந்த நாள். அன்றைய தினம் அவர் திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிடுவது வழக்கம். அதன்படியே அன்றைய தினம் கெளடா திருப்பதி செல்வதாகவும் டேனிஷ் அலி விளக்கியுள்ளார்.
கெளடாவுக்குப் பதில் தான் 3வது அணி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் அலி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications